ADDED : பிப் 23, 2025 11:07 PM
பெங்களூரு: பெங்களூரில் சமையல் எண்ணெயை தொடர்ந்து, தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எண்ணெய் 231 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகவில் அத்தியாவசிய பொருட்களின் விலை, தொடர்ந்து ஏறுமுகமாகிறது. பெட்ரோல், டீசல், பஸ் பயண கட்டணம், மெட்ரோ ரயில் கட்டணம், பால், காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள் என, அனைத்து விலைகளும் உயர்கிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்து மக்கள் வாழ்க்கை நடத்த சிரமப்படுகின்றனர்.
இதற்கிடையே தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. கோடைக்காலம் என்பதால், இளநீருக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. இளநீர் அதிக அளவில் விற்பனையாகிறது.
எனவே கொப்பரை தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேவையான அளவில் சப்ளை ஆவதில்லை. இதன் விளைவாக தேங்காய் எண்ணெய் 'கிடுகிடு' என உயர்கிறது.
இதற்கு முன் கிலோவுக்கு, 231 ரூபாயாக இருந்தது. தற்போது 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அந்தந்த பிராண்டுகளின் தரத்துக்கு ஏற்ப, விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. பொதுவாக மார்ச் மாதம் நடுவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் இம்முறை பிப்ரவரியிலேயே வெயில் சுட்டெரிக்கிறது. இளநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தேங்காய் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
