/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலித் எம்.எல்.ஏ.,க்கள் சதீஷ் வீட்டில் ஆலோசனை
/
தலித் எம்.எல்.ஏ.,க்கள் சதீஷ் வீட்டில் ஆலோசனை
ADDED : மார் 05, 2025 11:04 PM
பெங்களூரு: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் சதீஷ் ஜார்கிஹோளி. இவருக்கு மாநிலத் தலைவர் பதவி மீது ஆசை. எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மேலிடத்திடம், முதல்வர் பதவி கேட்கவும் தயாராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, பெங்களூரில் உள்ள சதீஷ் ஜார்கிஹோளி வீட்டிற்கு, எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மான்வி ஹம்பய்யா நாயக், சிரகுப்பா நாகராஜா, சண்டூர் அன்னபூர்ணா, மஸ்கி பசனகவுடா துருவிஹால், ராய்ச்சூர் ரூரல் பசனகவுடா தத்தல், கம்பளி கணேஷ், செல்லகெரே ரகுமூர்த்தி ஆகிய ஏழு பேர் வந்தனர்.
அரைமணி நேரத்திற்கு மேலாக, சதீஷ் ஜார்கிஹோளியுடன் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
'எஸ்.டி., சமூக மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி வழங்க வேண்டுமென, முதல்வரிடம் வலியுறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்' என, எம்.எல்.ஏ.,க்கள் கூறினர்.
ஆனாலும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து, ஆலோசனை நடந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.