சி.ஐ.டி., விசாரணை அதிகாரி முன் ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் ஆஜர்
சி.ஐ.டி., விசாரணை அதிகாரி முன் ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் ஆஜர்
ADDED : ஆக 28, 2026 11:23 PM

பெங்களூரு: கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்த வழக்கில், சி.ஐ.டி., விசாரணை அதிகாரி முன், ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி, சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது.
சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்தது பற்றி, அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. தேர்வு முறைகேடு தொடர்பாக கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் உள்ளிட்டோர், சி.ஐ.டி., விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையில், கே.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் கங்குவார் வீட்டிலும், அமலாக்கத்துறை, சி.ஐ.டி., சோதனை நடத்தியது. ஆனால் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.
தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, 15 நாட்கள் விடுப்பில் சென்ற ஞானேந்திரகுமார் மாயமானார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராக அவரது வீட்டில் அமலாக்கத்துறை, சி.ஐ.டி., போலீசார் 'சம்மன்' ஒட்டி சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சி.ஐ.டி., அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஞானேந்திரகுமார், விசாரணைக்கு ஆஜராகுவதாக கூறினார். அதன்படி நேற்று மதியம் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, சி.ஐ.டி., அலுவலகத்திற்கு வந்தார். விசாரணை அதிகாரி ராகவேந்திர ஹெக்டே முன் விசாரணைக்கு ஆஜராகினார்.
விசாரணையின் போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே, பெரும்பாலும் பதில் அளித்தார். அவரிடம் மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின், அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணைக்கும் அவர் ஆஜராகுவர் என்று கூறப்படுகிறது.
