ஏ.டி.எம்.,மில் ரூ.83 லட்சம் கொள்ளை ஒன்றரை ஆண்டுக்கு பின் இருவர் கைது
ஏ.டி.எம்.,மில் ரூ.83 லட்சம் கொள்ளை ஒன்றரை ஆண்டுக்கு பின் இருவர் கைது
ADDED : ஆக 13, 2026 12:13 AM
பீதர்: ஒன்றரை ஆண்டுக்கு முன், பீதரில் நடந்த வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக, பீஹாரை சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
பீஹார் நகரின் இதய பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் அதன் ஏ.டி.எம்., உள்ளது. கடந்த, 2025 ஜூன் 16ம் தேதியன்று, சி.எம்.எஸ்., எனும், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் ஏஜன்சியின் ஊழியர், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்திருந்தார்.
வேனில் இருந்த பணத்தை எடுத்து, ஏ.டி.எம்., இயந்திரத்தில் நிரப்ப செல்லும் போது, கொள்ளை கும்பல் அங்கு வந்து துப்பாக்கி சூடு நடத்தி, 83 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியது.
துப்பாக்கி சூட்டில், சி.எம்.எஸ்., ஊழியர் கிரி வெங்கடேஷ் என்பவர், குண்டு பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் சிவகுமார் குன்னள்ளி காயம் அடைந்தார்.
கொள்ளை தொடர்பாக பீதர் போலீசார், தனிப்படை அமைத்து பல கோணங்களில், தொடர்ந்து விசாரணை நடத்தினர். கடந்த 20 நாட்களுக்கு முன், கொள்ளையர்கள் பீஹாரில் இருப்பது தெரிந்தது. போலீஸ் குழுவினர் பீஹாருக்கு சென்று தங்கி, ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
கொள்ளையர்கள் அமன்குமார் சிங், அலோக்குமார் ஆகியோரை, பீஹாரின், வைஷாலி மாவட்டத்தின், தாமோதர் கிராமத்தில் நேற்று மதியம் கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன், பீதருக்கு அழைத்து வந்து கொண்டுள்ளனர்.
இங்கு வந்த பின்னரே, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளையர்கள் கைதான தகவலை அறிந்து, பொதுமக்களும், எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஒன் றரை ஆண்டாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பலரும் பாராட்டினர்.
