/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாற்று வீட்டுமனை' கேட்ட முதல்வர் மனைவி 'தெரியவே தெரியாது' என்கிறார் சித்தராமையா
/
'மாற்று வீட்டுமனை' கேட்ட முதல்வர் மனைவி 'தெரியவே தெரியாது' என்கிறார் சித்தராமையா
'மாற்று வீட்டுமனை' கேட்ட முதல்வர் மனைவி 'தெரியவே தெரியாது' என்கிறார் சித்தராமையா
'மாற்று வீட்டுமனை' கேட்ட முதல்வர் மனைவி 'தெரியவே தெரியாது' என்கிறார் சித்தராமையா
ADDED : பிப் 25, 2025 05:29 AM

பெங்களூரு: ''கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக, மாற்று வீட்டுமனை கேட்டு முடாவிடம், மனைவி பார்வதி கடிதம் கொடுத்தது எனக்கு தெரியாது,'' என்று, லோக் ஆயுக்தா விசாரணையின் போது, சித்தராமையா கூறி உள்ளார்.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா, கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
முதல்வரின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, நில உரிமையாளர் தேவராஜ் மீதும் வழக்குப்பதிவானது. நான்கு பேரும் லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராகி விளக்கமும் அளித்தனர்.
'பி' அறிக்கை
இந்த வழக்கில் முதல்வர் உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா போலீசார் கடந்த 19ம் தேதி, 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் முன்பு, சித்தராமையா விசாரணைக்கு ஆஜரான போது, அவரிடம் 30 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணைக்கு ஆஜரான உடன், பெயர், வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்கள் பற்றி கேள்வி கேட்டு உள்ளனர்.
முதல்வரிடம், லோக் ஆயுக்தா கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் சில விபரம் பின்வருமாறு:
உங்கள் மைத்துனர் மல்லிகார்ஜுன சாமியை எப்போது இருந்து உங்களுக்கு தெரியும்?
எனக்கு 1977ல் திருமணம் நடந்தது. அதற்கு முன்பே மைத்துனரை தெரியும். எங்கள் இருவருக்கும் இடையில் எந்த பண விவகாரமும் இல்லை. திருமணத்திற்கு பின் எனது மனைவியின் சகோதரர் என்ற முறையில், எனக்கு அவர் மைத்துனர்.
எப்போது?
மல்லிகார்ஜுன சாமி நிலம் எப்போது வாங்கினார், உங்களுக்கு எப்போது தெரியும்?
கடந்த 2004ல் தேவராஜ் என்பவரிடம் இருந்து நிலம் வாங்கி உள்ளார். எனது மனைவிக்கு 2010ல் தானமாக கொடுத்து உள்ளார். இதுபற்றி 2013ல் எனக்கு தெரியவந்தது.
உங்கள் மனைவிக்கு மைத்துனர் தானமாக கொடுத்த நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, உங்களிடம் ஏதாவது உதவி கேட்டாரா?
இல்லை. அந்த நேரத்தில் அவர் என்னை சந்திக்கவில்லை. எந்த உதவியும் கேட்கவில்லை.
தற்போதைய ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.பி., குமார் நாயக், மைசூரு கலெக்டராக இருந்த போது, முடாவில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படுகிறது. அவரை கலெக்டராக நியமிக்க, நீங்கள் தான் பரிந்துரை செய்தீர்களா?
நிச்சயமாக இல்லை.
திருமண புகைப்படம்
கடந்த 2013 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, நீங்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில், மனைவி பெயரில் உள்ள நிலம் குறித்து குறிப்பிட்டு இருந்தீர்களா?
அந்த தேர்தல் முடிந்து, நான் முதல்வர் ஆன பின்னர் தான், மனைவி பெயரில் நிலம் இருந்தது தெரிந்தது. இதனால் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.
உங்கள் மனைவிக்கு தானமாக கொடுக்கப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்தை, முடா கையகப்படுத்தியது உங்களுக்கு எப்போது தெரியும்?
கடந்த 2014 ம் ஆண்டு.
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்று வீட்டுமனை வழங்க, சிபாரிசு கடிதம் கொடுத்தீர்களா?
நான் எந்த சிபாரிசும் செய்யவில்லை. முடா நிலத்தை கையகப்படுத்தியது பற்றி, மனைவி என்னிடம் சொன்ன போது, நான் முதல்வராக இருந்தேன். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, அமைதியாக இருந்து விட்டேன்.
முடாவுக்கு கடிதம்
வீட்டுமனை கேட்டு உங்கள் மனைவி, முடாவுக்கு கடிதம் எழுதியது தெரியுமா?
எனக்கு தெரியாது.
உங்கள் மனைவிக்கு 50:50 திட்டத்தில் 14 வீட்டுமனைகள் கிடைத்தது எப்போது, அப்போது நீங்கள் என்ன பதவியில் இருந்தீர்கள்?
கடந்த 2020ல் கிடைத்தது. அப்போது நான் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தேன். முடா தலைவராக ராஜிவ் இருந்தார். அவர் பா.ஜ., ஆட்சியில் தலைவராக நியமிக்கப்பட்டவர்.
முடாவிற்கு உங்கள் மனைவி எழுதிய கடிதத்தில், சில வரிகளில் மார்க்னர் போட்டு அழிக்கப்பட்டு உள்ளதே?
எதற்கு என்று எனக்கு தெரியாது.
உங்கள் மனைவி திரும்ப கொடுத்த 14 வீட்டுமனைகளை, முடா திரும்ப பெற்று உள்ளது. திரும்ப கொடுக்க சொல்லி நீங்கள் தான் அழுத்தம் கொடுத்தீர்களா?
நான் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலத்தால் உங்களுக்கு கெட்ட பெயர் வந்து உள்ளது. உங்களை விட நிலம் முக்கியம் இல்லை. திரும்ப கொடுக்க போவதாக கூறினார். அதன்படி கொடுத்து உள்ளார்.