முதல்வர் அரசு இல்லத்தை முற்றுகையிட்டு ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் போராட்டம்
முதல்வர் அரசு இல்லத்தை முற்றுகையிட்டு ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் போராட்டம்
ADDED : ஆக 26, 2026 02:56 AM

பெங்களூரு: கே.பி.எஸ்.சி.,யில் நடக்கும் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, முதல்வர் சிவகுமாரின் அரசு இல்லமான காவேரியை முற்றுகையிட்டு, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கேட்டின் மீது ஏற முயன்றவர்களை போலீசார் குண்டுகட்டாக துாக்கி சென்றனர்.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வுகள் நடத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கே.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கால்நடை மருத்துவ அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்தது பற்றி அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
இந்நிலையில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து குமாரகிருபா சாலையில் உள்ள முதல்வர் சிவகுமாரின் அரசு இல்லமான காவேரி முன், ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திடீரென அரசு இல்லத்தின் கேட்டின் மீது ஏற முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குண்டுக்கட்டாக துாக்கி சென்று கைது செய்து, பஸ், வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதுபோல, மவுரியா சதுக்கம் பகுதியிலும், சாலையில் அமர்ந்து மாணவர் அமைப்பினர் போராடினர். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவர் அமைப்பின் இளம்பெண்கள் சாலையில் படுத்து உருண்டு போராடினர். அவர்களை கைது செய்ய பெண் போலீஸ் அங்கு இல்லை.
இதனால் ஆண் போலீசாரே, இளம்பெண்களை குண்டு கட்டாக துாக்கி கைது செய்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், பெண்களை கைது செய்ய ஏன் பெண் போலீஸ் வரவில்லை என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டி.சி.பி., யத்தீஷிடம் மைக்கை நீட்டி கேள்வி எழுப்பினர்.
