வெண் பஞ்சாக கொட்டும் ‘பட்டர் மில்க்’ நீர்வீழ்ச்சி
வெண் பஞ்சாக கொட்டும் ‘பட்டர் மில்க்’ நீர்வீழ்ச்சி
ADDED : ஏப் 29, 2026 10:41 PM
– நமது நிருபர் –
கோடை வெயில், மக்களை வறுத்தெடுக்கிறது. குளுகுளுவென நீரில் விழுந்தால், நன்றாக இருக்கும் என, மனம் விரும்பும். நகர்ப்புற மக்கள் நீர் வீழ்ச்சிகளை தேடி செல்வர். இவர்களுக்கு பட்டர் மில்க் நீர் வீழ்ச்சி பெஸ்ட் சாய்ஸ்.
கோடைக்காலம், மழைக்காலம், குளிர் காலம் என, அனைத்து காலங்களிலும் ரசிக்க ஏற்ற இடம் சிக்கமகளூரு. அபூர்வ மரங்கள், தாவரங்கள் சூழ்ந்த மலைப்பிரதேசம், கண்களை குளிர்வித்து, மனதை மயங்க வைக்கும் பசுமையான காபி, தேயிலை தோட்டங்கள், வாழை தோட்டங்கள், சொக்க வைக்கும் வனப்பகுதி, நீர் வீழ்ச்சிகள் சூழ்ந்த மாவட்டம் என்பதால், சிக்கமகளூரு எப்போதுமே, சுற்றுலா பயணியருக்கு பிடித்த இடமாகும். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடங்களில், சிக்கமகளூரும் ஒன்றாகும்.
சிக்கமகளூரு நகரில், ஜரி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி தனியார் காபி தோட்டத்துக்கு நடுவே அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதி, காபி தோட்டங்கள் சூழ்ந்த, இயற்கை எழில் மிகுந்த பகுதியில் இருப்பதால், சுற்றுலா பயணியர் குவிகின்றனர். இங்கு தண்ணீர் மோர் போன்ற வெண்மையான நிறத்தில் பாய்வதால், ‘பட்டர்மில்க் நீர்வீழ்ச்சி’ என, அழைக்கின்றனர்.
மழைக்காலத்தில் தண்ணீர் விழுவது, அற்புதமான காட்சியாக இருக்கும் என்பதால், சுற்றுலா பயணியர் அதிகம் வருவர். கோடைக்காலத்திலும் நீச்சலடித்து விளையாட, இயற்கை அழகை ரசிக்க, பெருமளவில் வருகின்றனர்.
இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அடர்ந்த வனம், கரடு, முரடான பாதையில் செல்ல வேண்டும். இப்பாதையில் நடந்து செல்வது கடினம். ஜீப்பில் செல்ல வேண்டும். இதற்காகவே தனியார் வாடகை ஜீப்புகள் உள்ளன. தனியார் வாகனங்களுக்கு இங்கு அனுமதி இல்லை.
காலை சென்றால் மாலை வரை, இயற்கையை ரசித்துவிட்டு, நீர் வீழ்ச்சியில் விளையாடிவிட்டு, புத்துணர்ச்சியுடன் திரும்பலாம். கான்கிரீட் கட்டடங்களில் வசிக்கும், பணிச்சுமையில் தவிக்கும் மக்கள், பட்டர் மில்க் நீர் வீழ்ச்சிக்கு வந்தால், அலுப்பும், சலிப்பும் காணாமல் போகும்.
