ADDED : ஜூலை 14, 2026 03:59 AM

- நமது நிருபர் -:
பீதர் மாவட்டம், அவுராத் தாலுகாவில் சிவபெருமானின் வடிவமாக ஸ்ரீ அமரேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில், 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
கோவிலினுள் கண்டெடுக்கப்பட்ட 12ம் நுாற் றாண் டை சேர்ந்த கல்வெட்டில், 'கோவில் வளர்ச்சிக்காக தொட்ட பெட்டா அருகில், 15 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டு உள்ளது' என்ற குறிப்பு காணப்படுகிறது. இப்பகுதி முதலில் அமரேஸ்வரவாடி, அமராவதி, அவராவதி என்று அழைக்கப்பட்டு, இன்று அவுராத்தாக மாறி உள்ளது.
புராணங்கள்படி, 1,000 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிக்கு வந்த முனிவர் ஒருவர், பல ஆண்டுகள் தியானம் செய்தார். அப்போது யனகுண்டா கிராமத்தில் இருந்து, சில பசுக்கள் மேய்ச்சலுக்கு இங்கு வரும். இவற்றில் ஒரு பசு மட்டும், தினமும் முனிவரின் அருகில் உள்ள புற்றின் மீது, சுயமாக பால் சொரிந்தது.
மாலையில் கோ சாலைக்கு திரும்பிய பசுவின் மடி காலியாக இருந்தது. இதை கவனித்த விவசாயி, மறுநாள் பசுக்களை பின் தொடர்ந்து சென்று பார்த்தார். மேய்ந்து கொண்டிருந்த பசுக்களில் குறிப்பிட்ட பசு மட்டும், புற்றில் பால் சொரிந்தது.
இதை ஆச்சரியத்துடன் பார்த்த விவசாயி, புற்றை உடைத்து தோண்டிய போது, அங்கு சிவலிங்கம் இருப்பதை கண்டார். இதை கிராமத்தினருக்கு தெரிவித்தார். அவர்களும் அங்கு வந்து பார்த்தனர்.
அன்று முதல் இதனை, 'உத்பவ லிங்கம்' எனும் சுயம்புலிங்கம் என்று அழைத்தனர். அதன் பின், இப்பகுதியில் கோவில் கட்டப்பட்டது. சிறிய வடிவிலான லிங்கத்தின் முன் நந்தீஸ்வரர் சிலை உள்ளது.
இக்கோவில், திராவிட கட்டட கலை பாணியில் உருவானது. கோவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிற்ப வேலைப்பாடுகளுடன் துாண்கள் அமைக்கப் பட்டுள்ளன.
கண்ணை கவரும் வகையில் ஒரு பெரிய மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் நுழைவாயிலில் இரு கஜலட்சுமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இக்கோவிலில் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. மஹா சிவராத்திரியன்று 75,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர், ஆண்டு ரத உத்சவத்தின் போது, 25 அடி உயர தேர், பவனி வரும். பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருவர்.
