ADDED : ஜூலை 14, 2026 03:59 AM

- நமது நிருபர் -:
சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹலே ஆலுார் பகுதியில் ஸ்ரீ அரகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது, 10ம் நுாற்றாண்டை சேர்ந்ததாகும். சிவபெருமான் அரகேஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். கோவில் முழுதும் எண்ணிலடங்கா சிற்பங்களால் நிறைந்து உள்ளன. இக்கோவில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவில் நுழைவாயிலின் இருபுறமும் பழங்கால வாத்தியங்களை இசைத்து கொண்டு, நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடுவது போன்ற சிற்பங்கள் தத்ரூபமாக செதுக்கப்பட்டு உள்ளன. பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை.
இக்கோவில், நந்தி மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைக்கு மேலே விமானம் எதுவுமில்லை. மேற்கூரையில் சிவபெருமான் நடனமாடும் அரிய சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. இது பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும்.
கோவிலில் கன்னட மொழியில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. இதில், சில தமிழ் கல்வெட்டுகளும் இருக்கின்றன. கல்வெட்டுகளில் சோழ மன்னர்கள் வழங்கிய நன்கொடைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
கோவில், தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும். இயற்கை சூழலில் கோவில் அமைந்துள்ளதால், தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. இக்கோவிலில் வழக்கமாக பிரதோஷம், சிவராத்திரி, திங்கட்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்படும். அரகேஸ்வரரை பக்தர்கள் மனமுருகி வேண்டினால் சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
