செயற்கை நிறம் பூசப்பட்ட 106 கிலோ பட்டாணி பறிமுதல்
செயற்கை நிறம் பூசப்பட்ட 106 கிலோ பட்டாணி பறிமுதல்
ADDED : ஜூலை 05, 2026 11:29 PM

மைசூரு: உடல் ஆரோக்கியத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தும், செயற்கை நிறம் பயன்படுத்தப்பட்ட பச்சை பட்டாணி விற்கப்படுவதை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 106 கிலோ பட்டாணி பறிமுதல் செய்யப்பட்டது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில், காய்கறிகள், பழங்களுக்கு செயற்கை நிறங்களை பயன்படுத்த கூடாது என, மாநில அரசு பல முறை உத்தரவிட்டுள்ளது.
மீறினால் நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில், செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்களை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மைசூரின் எம்.ஜி.சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில், ரசாயனம் பூசப்பட்ட பச்சை பட்டாணி விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ரவீந்திரா தலைமையிலான குழுவினர், நேற்று காலை மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆறு வியாபாரிகள், ரசாயன செயற்கை நிறம் பூசப்பட்ட பட்டாணி விற்பது தெரிந்தது. வியாபாரிகளிடம் இருந்து 106 கிலோ பட்டாணிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பட்டாணி புதிதாகவும், பச்சை நிறத்திலும் தென்பட வேண்டும் என்பதற்காக, செயற்கை நிறங்கள் பயன்படுத்தியதை, வியாபாரிகள் ஒப்புக்கொண்டனர். பட்டாணியில் எந்த விதமான ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள, மாதிரியை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
காய்கறிகளில் இத்தகைய ரசாயன நிறம் பயன்படுத்துவதால், மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மார்க்கெட்டில் இருந்த 35க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அபாயகரமான செயற்கை நிறத்தை பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.
ரவீந்திரா கூறியதாவது:
பச்சை பட்டாணியில் செயற்கை நிறம் பூசப்பட்டதா என்பதை, பொது மக்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம். பட்டாணியில் சந்தேகம் இருந்தால், கண்ணாடி பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை லேசாக ஆட்ட வேண்டும்.
அப்படி செய்தால், பட்டாணியில் பூசப்பட்ட நிறம் நீரில் மிதக்கும். அது செயற்கை நிறம் பூசப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு, பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
