பதுக்கிய உரம், விதைகள் அதிகாரிகள் அதிரடி பறிமுதல்
பதுக்கிய உரம், விதைகள் அதிகாரிகள் அதிரடி பறிமுதல்
ADDED : ஜூலை 05, 2026 11:29 PM
பெங்களூரு: சட்டவிரோதமாக விதைகள் மற்றும் உரங்களை பதுக்கி வைத்ததாக புகார் வந்ததால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், விவசாயத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளர்கள், உரங்கள், விதைப் பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கை முறையில் பற்றாக்குறையை உருவாக்கி, அதிக விலைக்கு விற்பதாக, விவசாயத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்படி விவசாயத்துறை அதிகாரிகள், மாண்டியா, துமகூரு, ஹாசன் உட்பட பல்வேறு மாவட்டங்களில், உரம் விற்பனை கடைகளில் நேற்று காலையில் சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட உரம், விதை பொருட்களை கைப்பற்றினர். ஹாசன் மாவட்டத்தின், கொன்டஜ்ஜிகொப்பலு கிராமத்தில் உள்ள, 'கார்த்திகா டிரேடர்ஸ்'சில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த, 85,000 ரூபாய் மதிப்புள்ள 180 கிலோ ஹைபிரிட் மக்காச்சோளம் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசிகெரேவின், ஜாவகல்லில் உள்ள 'புஷ்பகிரி அக்ரோ' மையத்தில், 12,000 ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ மக்காச்சோளம் விதைகள், பேலுாரின், அரேஹள்ளியில் 'வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ்' கடையில், பதுக்கப்பட்ட 1.77 லட்சம் மதிப்புள்ள 88 பைகள் யூரியா கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்று, துமகூரு, மாண்டியா மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட உரம், விதைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
