வேருடன் சாய்ந்த ஆலமரம்: உயிர் தப்பிய 3 குடும்பத்தினர்
வேருடன் சாய்ந்த ஆலமரம்: உயிர் தப்பிய 3 குடும்பத்தினர்
ADDED : ஜூலை 05, 2026 11:29 PM

பெங்களூரு: பெலகாவியில் தொடர் மழை காரணமாக, பெரிய ஆலமரம் வேருடன் சாய்ந்ததில், மூன்று வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
பெலகாவி நகர் உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்வதால், அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென அதிகரிக்கிறது. விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். நடப்பாண்டு ஜூன் மாதம், எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை.
வருத்தம் இதன் விளைவாக பெலகாவி மாவட்டத்தில் பாயும் கிருஷ்ணா, மல்லப்பிரபா, கட்டபிரபா, மார்கண்டேயா, ஹிரண்யகேஷி, துாத் கங்கா, வேதகங்கா ஆறுகள் வறண்டன. மல்லப்பிரபா, ஹிடகல், ராகசகொப்பா அணைகளில் நீர் மட்டம் குறைந்தது. விதை துாவி விட்டு மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் வருத்தம் அடைந்தனர்.
கடந்த மூன்று நாட்களாக, பெலகாவி நகர் உட்பட, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால், ஆறுகள், அணைகளில் நீர் வரத்து அதிகரிக்கிறது. இரண்டு மாதமாக வறட்சியாக காணப்பட்ட கிருஷ்ணா ஆற்றில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவிலும் பலத்த மழை பெய்வதால், அங்கிருந்து தண்ணீர் பாய்ந்து வருவதாலும், பெலகாவியின் ஆறுகள், அணைகளில் நீர் வரத்து அதிகரிக்கிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிக்கோடியின் ஜோடகுராலி கிராமத்தை சேர்ந்தவர் கங்கவ்வா. இவர் வீட்டில் ஏழு பேர் உள்ளனர். இவர்களின் வீடு ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையில், சுவற்றின் பலம் குறைந்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் இரவு, சுவர் லேசாக சாய்வதை பார்த்த வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். சில விநாடிகளில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் நுாலிழையில் அவர்கள் உயிர் தப்பினர்.
பெலகாவி குண்டநகரியில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. உப்பாராகள்ளியில் 100 ஆண்டு பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் மரம் அசைவதை பார்த்த அருகில் வசித்த சிலர், வீட்டில் இருப்பவர்களை எச்சரித்தனர்.
வீட்டிலிருந்தோர், உடனடியாக வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் இரு வீடுகளின் மீது மரம் விழுந்தது. அனைவரும் வெளியே ஓடி வந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து வந்த பஞ்சாயத்து அதிகாரிகளிடம், 'எங்கள் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்து விட்டன. ஏழையான எங்களுக்கு மாற்று வீடு ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இடிந்த வீட்டை புதுப்பித்து தர வேண்டும்' என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.
