அமைச்சர் பதவி கேட்டு என்னை சந்திக்க வராதீங்க எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் சிவகுமார் கண்டிப்பு
அமைச்சர் பதவி கேட்டு என்னை சந்திக்க வராதீங்க எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் சிவகுமார் கண்டிப்பு
ADDED : ஜூலை 05, 2026 11:27 PM

பெங்களூரு: ''அமைச்சர் பதவிக்காக, எந்த எம்.எல்.ஏ.,க்களும் என்னை சந்திக்க வராதீர்கள். அமைச்சர் பதவி விஷயத்தில், மேலிடத்தின் முடிவே இறுதியானது'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடிக்க, பலரும் போட்டி போடுகின்றனர். பல முறை டில்லிக்கு சென்று, காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து, அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி மன்றாடினர். தங்களின் ஆதரவாளர்கள் படையுடன், முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உட்பட முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கு சென்று, நெருக்கடி கொடுக்கின்றனர்.
அமைச்சர் பதவி எதிர்பார்ப்பவர்களில், ஹுன்குந்த் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவரும் ஒருவர். நேற்று இவர் தன் ஆதரவாளர்களுடன், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவுக்கு சென்றார். முதல்வர் சிவகுமாரை சந்தித்து, அமைச்சர் பதவி குறித்து பேசினார்.
கைவிரிப்பு அப்போது சிவகுமார் கூறியதாவது:
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் உள்ளது. கட்சி மேலிட தலைவர்கள் என்ன முடிவு எடுப்பர் என்பது, எங்களுக்கு தெரியாது. காங்கிரஸ் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்கிறது. முதல் முறை வெற்றி பெற்றவர்களுக்கும், எட்டு முதல் ஒன்பது முறை வெற்றி பெற்றவர்களுக்கும், அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இவ்விஷயத்தில், என்னால் முடிவு செய்ய முடியாது.
கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டு, நாம் நடக்க வேண்டியுள்ளது. அமைச்சர் பதவியை எதிர்பார்ப்போரின் விருப்பங்களை, மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். இனி யாரும் தங்கள் ஆதரவாளர்களுடன், அமைச்சர் பதவி கோரிக்கையுடன், என்னிடம் வராதீர்கள். 2028ல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே, நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நெருக்கமான நண்பர் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, 140 எம்.எல்.ஏ.,க்களுக்கும் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஜாதி, மாவட்டம் என ஒவ்வொன்றையும் அலசி, ஆராய்ந்து மேலிடம் முடிவு செய்யும்.
நானும் கூட சிறு வயதிலேயே, அமைச்சர் பதவியில் அமர்ந்தவன். எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், எனது நெருக்கமான நண்பர். அவரது சார்பில் ஆதரவாளர்கள் என்னை சந்திக்க வந்தது, மகிழ்ச்சியான விஷயம். அவரது தந்தையும், என்னோடு எம்.எல்.ஏ.,வானவர். அமைச்சராகவும் இருந்தார். அவரது தாயும் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அந்த தேர்தலில் அவருக்காக, நானும் பணியாற்றினேன்.
கட்சிக்காக விஜயானந்த் காசப்பனவர் செய்த பணிகளை பற்றி, எனக்கும் தெரியும். அவருக்கு லிங்காயத் மேம்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவரும் சமுதாயத்துக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
