மின்சாரம், குடிநீரை வீணாக்கக்கூடாது அரசு அலுவலகங்களுக்கு உத்தரவு
மின்சாரம், குடிநீரை வீணாக்கக்கூடாது அரசு அலுவலகங்களுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 05, 2026 11:27 PM
பெங்களூரு: விதான் சவுதாவில், மின்சாரம், குடிநீர் வீணாவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நெறிமுறைகள் வெளியிட்டு, இவற்றை பின்பற்றும்படி உத்தரவிட்டுள்ளது.
ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள உத்தரவு:
அரசு அலுவலகங்களில், தேவையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் வீணாக்கப்படுவதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதை அரசு தீவிரமாக கருதுகிறது. விதான் சவுதா உட்பட மற்ற அரசு அலுவலகங்களில் மின்சாரம், குடிநீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாநில அரசு மின்சாரம் மற்றும் குடிநீர் பாதுகாப்புக்கு, அதிகமான முக்கியத்துவம் அளித்துள்ளது. இது குறித்து, 2022ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி நெறிமுறைகள் வெளியிட்டது. இவற்றை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என, இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்சாரத்தை மிச்சப்படுத்த, விதான் சவுதா வளாகத்தில் உள்ள மின் விளக்குகள், சூர்யோதயம், சூரிய அஸ்தமனம் நேரத்துக்கு சரியாக மின் விளக்குகள், தானாகவே எரிந்து, அணையும் வசதி செய்யப்படுகிறது. தினமும் அலுவலக நேரம் முடிந்த பின், 'டி' குரூப் ஊழியர்கள், அனைத்து மின் விளக்குகளையும், தேவையற்ற மின் உபகரணங்களை கட்டாயமாக நிறுத்த வேண்டும்.
அனைத்து 'ஏசி'களை, 24 முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையிலேயே பயன்படுத்த வேண்டும். குடிநீரை பாதுகாக்கும் நோக்கில், மேற்புறம் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வழியாமல் இருக்க, 'பால் வால்வு'கள் பொருத்தப்பட்டுள்ளன.
விதான் சவுதாவில் தண்ணீர் வீணாகாமல் பார்த்து கொள்வது, பொதுப்பணித் துறை இன்ஜினியர்களின் பொறுப்பாகும். விதான் சவுதா பூங்காவுக்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இரண்டு போர்வெல்கள் செயல்படுகின்றன. மழை நீர் சேகரிப்பு வசதியை, மேலும் அதிகரிக்க வேண்டும். குடிநீரை மிச்சப்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியத்தின் உதவி பெறப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
