ADDED : ஜூலை 22, 2026 11:26 PM
துமகூரு: கல் குவாரியில் 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த 12 பேர் மீட்கப்பட்டனர்.
துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவின், ஹுலியூருது ர்கா அருகில் உள்ளர பாவசந்திரா கிராமத்தில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி நடக்கிறது.
இங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச சுதந்திரமும் இருக்கவில்லை. கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
நிர்ணயித்த நேரத்தை விட, அதிகமான நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தினர்.
இது குறித்து தகவலறிந்த, 'முக்தி' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
இதன் அடிப்படையில், போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்று, திடீர் சோதனை நடத்திய போது, தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிந்தது. அங்கிருந்த செலுவா போவி, 45, சரஸ்வதி, 40, பழனி, 50, சரோஜா, 40, சவும்யா, 40, புருஷோத்தம், 20, ரவி, 20, பவித்ரா, 25, மஞ்சுளா, 35, கிருஷ்ணா, 25, ஆறுமுகம், 56, பாக்யம்மா, 47, ஆகிய 12 பேர் மீட்கப்பட்டனர். இவர்களுடன் இரண்டு சிறார்களும் இருந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் மாண்டியா மாவட்டத்தின், கே.ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்தவர்கள். கல்குவாரி உரிமையாளர், இவர்களுக்கு முன் பணம் கொடுத்து குவாரியில் பணிக்கு அழைத்து வந்திருந்தார்.
அன்று முதல் இன்று வரை, இங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக, இவர்கள் வெளி உலகத்தையே பார்க்கவில்லை. அதிகாரிகளின் நடவடிக்கையால் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தியது, தொழிலாளர்களை அடைத்து வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்கியது தொடர்பாக, குவாரி உரிமையாளர் மீது, ஹுலியூரு துர்கா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
