சின்னையா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் தர்மஸ்தலா வழக்கு
சின்னையா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் தர்மஸ்தலா வழக்கு
ADDED : ஜூலை 22, 2026 11:26 PM
பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சின்னையா தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, சின்னையா என்பவர் அளித்த புகாரில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது.
விசாரணையில் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில், கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே பெயருக்கு களங்கம் விளைவிக்க, சின்னையா பொய் புகார் கூறியது தெரிந்தது. இதையடுத்து சின்னையா, அவரை பொய் புகார் அளிக்க துாண்டிவிட்ட மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் உட்பட ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது.
இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சின்னையா தாக்கல் செய்த மனுவில், 'தர்மஸ்தலா வழக்கில் என்னை மட்டும் எஸ்.ஐ.டி., கைது செய்தது. மற்றவர்களை கைது செய்யவில்லை.
வழக்கு விசாரணை மெதுவாக நடக்கிறது; விசாரணையை விரைவில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவை நீதிபதி சூரஜ் கோவிந்த்ராஜ் விசாரித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி தர்மஸ்தலா வழக்கின் முழு விசாரணை அறிக்கையை, பெல்தங்கடி நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், சின்னையா மனு மீது நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பெல்தங்கடி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது பற்றி, நீதிபதி கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, மனுதாரர் கேட்டபடி, வழக்கின் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இனியும் அவரது மனு மீது விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
