ஜி.பி.ஏ., ஊழியர்கள் மீது தாக்குதல் கன்னட அமைப்பின் தலைவர் கைது
ஜி.பி.ஏ., ஊழியர்கள் மீது தாக்குதல் கன்னட அமைப்பின் தலைவர் கைது
ADDED : ஜூலை 22, 2026 11:26 PM

சிவாஜிநகர்: நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற, ஜி.பி.ஏ., ஊழியர்களை தாக்கிய வழக்கில், கன்னட அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் சிவாஜிநகர் பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் மதியம் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய ஜி.பி.ஏ., ஊழியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. 'பெப்பர் ஸ்பிரே' அடித்தனர்.
இதுகுறித்து ஜி.பி.ஏ.,வின் சிவாஜிநகர் மண்டல உதவி செயற்பொறியாளர் மாதவ் ராவ் அளித்த புகாரில், கமர்சியல் தெரு போலீசார், கிரண், 34, பசவராஜ், 28, ரஞ்சித், 19, ரங்கசாமி, 49, முஹாகித் அகமது, 39, கோட்ரேஷ், 26, பரசுராம், 27, ரகு, 28, பார்த்திபன், 23, பரத், 24 ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
ஜி.பி.ஏ., ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில், 'நம்ம கர்நாடக சேனை' என்ற கன்னட அமைப்பின் மாநில தலைவர் பசவராஜ் படுகோட்டே என்பவர் இருந்தது தெரி ந்தது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர் தலைமறைவாகி விட்டார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வெளியிட்ட வீடியோவில், 'நடைபாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக நாங்கள் பிரச்னை செய்யவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்த இடத்தில் எங்கள் அமைப்பின் கொடி இருந்தது. அதன் அருகே கோவிலும் இருந்தது. கொடியை அகற்றும் விஷயத்தில், ஜி.பி.ஏ., ஊழியர்கள் அநாகரிகமாக பேசினர். இதை நாங்கள் எதிர்த்தோம். நானே போலீசில் சரண் அடைவேன்' என்று பேசி இருந்தார்.
ஆனாலும், நேற்று காலை பசவராஜ் படுகோட்டேயை, கமர்சியல் தெரு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கைதான 10 பேரும், தாங்கள் செய்தது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டு, போலீஸ் காவலில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
