/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாதுகாப்பு மையத்தில் 14 வயது சிறுமி கடத்தல்
/
பாதுகாப்பு மையத்தில் 14 வயது சிறுமி கடத்தல்
ADDED : ஆக 10, 2025 02:48 AM
பெலகாவி : சிறார்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து 14 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மாவட்டத்தில், இச்சம்பவம் நடந்துள்ளது.
பெலகாவி நகரின் மாளமாருதி கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு, ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பிணி என்பதும், சட்டவிரோதமாக திருமணம் நடந்திருப்பதும் தெரிய வந்தது. மருத்துவமனை டாக்டர்கள், மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற அதிகாரிகள், சிறுமியை மீட்டனர். பெலகாவியின், மஹாந்தேஷ் நகரில் உள்ள, சிறார் காப்பகத்தில் சேர்த்திருந்தனர்.
சிறுமியை திருமணம் செய்தவரின் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் நேற்று முன் தினம், சிறுமி தங்கியிருந்த சிறார் பாதுகாப்பு மையத்துக்கு நபர் ஒருவர் வந்தார். தன்னை சிறுமியின் சித்தப்பா என, அறிமுகம் செய்து கொண்டார். மருந்து கொடுக்க வேண்டும் என, நம்ப வைத்து உள்ளே சென்றார்.
அங்கிருந்த ஊழியர்களிடம் கத்தியை காண்பித்து மிரட்டி, சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்து, மாளமாருதி போலீஸ் நிலையத்தில் சிறார் பாதுகாப்பு மையத்தினர் புகார் செய்தனர். போலீசாரும் அங்கு வந்து விசாரித்தனர். பல கோணங்களில் விசாரணை நடத்தி, அந்நபரை நேற்று கைது செய்தனர். சிறுமியை மீட்டனர். அந்நபர் குறித்த தகவலை, போலீசார் வெளியிடவில்லை.
சிறுமி இருந்த பாதுகாப்பு மையத்தில், பாதுகாப்பு ஊழியர்களோ, கண்காணிப்பு கேமராவோ இல்லை. இதை பயன்படுத்தி அந்நபர் உள்ளே நுழைந்து, சிறுமியை கடத்தியுள்ளார். மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மாவட்டத்திலேயே, இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.