ADDED : ஜூன் 20, 2026 10:51 PM
சிக்கமகளூரு: பத்ரா புலிகள் சரணாலயத்தில், காட்டு யானை தாக்கியதில், வனத்துறை ஊழியர்கள் இருவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், கல்லுகொவே கிராமத்தின், பத்ரா புலிகள் சரணாலயத்தின் சுற்றுப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமி ட்டுள்ளன.
இவை கிராமங்களில் நுழையாமல் கண்காணிக்கும்படி, உயதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி நேற்று முன்தினம் மாலை, வனத்துறை ஊழியர்கள் ஹரிஷ், பசவராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஹெப்பே வன மண்டல பகுதியில், செல்லும் போது எதிரே வந்த காட்டு யானை, இருவரையும் தும்பிக்கையால் பலமாக தாக்கி, கீழே தள்ளியது. அதன்பின் அங்கிருந்து சென்றது. யானையை கண்டு, மற்ற ஊழியர்கள் அங்கிருந்து ஓடியதால், உயிர் தப்பினர்.
யானையின் தாக்குதலால் ஹரிஷின் முதுகெலும்பில், பலத்த அடிபட்டது. பசவராஜின் கை, கால் எலும்புகள் முறிந்தன. இவர்களை கண்ட அப்பகுதியினர், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகெலும்பில் அடிபட்டதால், ஹரிஷுக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால், ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனையில் இருந்து, மங்களூரின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பத்ரா வன விலங்கு சரணாயத்தின், ஹெப்பே மண்டலத்தில் சமீப நாட்களாக காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றன. என்.ஆர்.புரா நகரில் இருந்து, வெறும் 10 கி.மீ., தொலைவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள் பயத்துடன் வசிக்கின்றனர். யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர், நிரந்தரமாக கண்காணிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், இரண்டு ஊழியர்கள் யானையால் தாக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை வனத்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர்.
