/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழ் மாணவியை கொன்ற வாலிபர் உட்பட 2 பேர் கைது
/
தமிழ் மாணவியை கொன்ற வாலிபர் உட்பட 2 பேர் கைது
ADDED : அக் 18, 2025 04:55 AM

ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் தமிழ் மாணவி யாமினி பிரியா கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி, அவர் தப்பிச் செல்ல உதவிய நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் - வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா, 20. கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரின் ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா 1வது மெயின் ரோட்டில் வசிக்கிறார்.
பனசங்கரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்த யாமினி பிரியா, நேற்று முன்தினம் மதியம் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
ஒருதலை காதலால் யாமினி பிரியாவை, அவரது எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்ய, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர் எங்கு சென்றார் என்பதை போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.
சோழதேவனஹள்ளியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்னேஷை நேற்று மதியம் 1:30 மணிக்கு போலீசார் கைது செய்தனர். யாமினி பிரியாவை கொன்ற பின், விக்னேஷை பைக்கில் அழைத்துச் சென்று, சோழதேவனஹள்ளியில் தங்க வைத்த, விக்னேஷின் நண்பர் ஹரிஷ், 30, என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, ஸ்ரீராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
'வாட்ஸாப்' குழு போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யாமினி பிரியா தினமும் வீட்டில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறார்; எங்கு செல்கிறார்; எப்போது வருகிறார்; யாருடன் பேசுகிறார் என்பதை, விக்னேஷின் நண்பர்கள் கண்காணித்து, விக்னேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
'வாட்ஸாப்'பில் 'மிஷன் யாமினி பிரியா' என்ற பெயரில் குழு உருவாக்கி, அதில் தகவலை பரிமாறியதும் தெரிய வந்தது. இந்த குழுவில் விக்னேஷ் உட்பட மேலும் சிலர் இருக்கின்றனர். அவர்களையும் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உடல் தகனம் இதற்கிடையில் விக்டோரியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், யாமினி பிரியா உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
'ஒன்றும் தெரியாத அப்பாவியான என் மகளை, அந்த பாவி கொன்றுவிட்டான். அவனை சும்மா விட கூடாது; என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும்; என் மகளை போன்று, வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வர கூடாது' என, யாமினி பிரியாவின் தாய் வரலட்சுமி கதறி அழுதார்.
அது காண்போரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இறுதிச்சடங்கிற்கு பின், யாமினி பிரியாவின் உடல், ஸ்ரீராமபுரம் ஹரிசந்திரா காட் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.