சீன சைபர் கிரைம் கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
சீன சைபர் கிரைம் கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
UPDATED : மார் 12, 2026 06:02 AM
ADDED : மார் 12, 2026 05:59 AM

பெங்களூரு: சீனா நாட்டின் சைபர் கிரைம் கும்பலுடன் தொடர்பில் இருந்த, மங்களூரின் இருவரை, கர்நாடக சைபர் கமாண்ட் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் சைபர் குற்றங்களை தடுக்க, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பிரணவ் மொஹந்தி தலைமையில் சைபர் கமாண்ட் மையம் மூன்று மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் பணியாற்றும் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, சீன சைபர் கிரைம் கும்பலுடன் தொடர்பில் இருந்த, மங்களூரின் சாலித் அகமது, 35, முகமது அனீஸ், 35 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், 18 டெபிட் கார்டுகள், பல வங்கிக்கணக்கு புத்தகங்கள், ஆறு காசோலைகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.
மங்களூரில் சைபர் மையம் நடத்தி வரும் சாலித் அகமது, முகமது அனீஸ் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்தனர்.
இதை நம்பி, ஆதார் கார்டு நம்பர் உள்ளிட்ட தகவல்களை கொடுப்போர் பெயரில், போலி வங்கிக்கணக்கு ஆரம்பித்தனர். சீன சைபர் கிரைம் கும்பலுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த இவர்கள், வங்கிக்கணக்கு விபரங்களை அந்த கும்பலுக்கு அனுப்பி வைப்பர்.
சீன கும்பல் சைபர் மோசடி மூலம் பெறும் பணத்தை, வங்கிக்கணக்குகளில் செலுத்தி, வேறு கணக்குகளுக்கு மாற்றி உள்ளனர். இதற்காக மோசடி கும்பலிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை, கைதான இருவரும் வாங்கியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
