/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'2048 ஆனாலும் சிவகுமார் முதல்வராக மாட்டார்'
/
'2048 ஆனாலும் சிவகுமார் முதல்வராக மாட்டார்'
ADDED : பிப் 17, 2026 11:45 PM

மங்களூரு : ''துணை முதல்வராக உள்ள சிவகுமார், 2048லும் முதல்வராக மாட்டார்,'' என மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி கூறினார்.
மங்களூரில் அவர் அளித்த பேட்டி:
சிவகுமார், 2028ல் முதல்வராக மாறுவார் என அக்கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர். 2028ல் நடக்கும் அடுத்த தேர்தலில் என்ன, 2048 ஆனாலும் அவர் முதல்வராக மாட்டார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, அவர் கட்சியில் ஏதேனும் அதிகாரம் இருக்கிறதா. முக்கியமான முடிவுகள் என்றால் கட்சி மேலிடமே எடுக்கும் என அவரே கூறுகிறார். இதிலிருந்து கார்கேவின் பலத்தை நம்மால் அறிய முடிகிறது.
முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என சித்தராமையா பிடிவாதமாக உள்ளார். அதே போல, சிவகுமாரும், முதல்வர் பதவியை அடைந்தே தீருவேன் என சண்டை போடுகிறார். இவர்களின் மோதலில் உண்மையில் பாதிக்கப்படுவது மக்களே. எந்த நலத்திட்டங்களும் மக்களை சென்றடைவதில்லை.
கர்நாடக முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் உயிரற்றது போல இருக்கிறது. கட்சி மேலிடம் என யாரை குறிப்பிடுகின்றனர் என்பது வேடிக்கையாக உள்ளது. சிவகுமாரும், அவரது தம்பி சுரேஷும் கட்சி மேலிடம் ஆதரவாக உள்ளது என்கின்றனர்.
சித்துவின் மகனின் யதீந்திராவோ, கட்சி மேலிடம் தங்களுக்கு ஆதரவாகவே உள்ளது என கூறுகிறார்.
இதில் எதை நம்புவது என தெரியவில்லை. ஒரு வேளை, இரண்டு கட்சி மேலிடம் இருக்கிறதா என்று குழப்பம் வருகிறது. எது எப்படியோ, மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சி அடுத்த தேர்தலில் விரட்டி அடிக்கப்படும்.
மக்களை மறந்துவிட்டு; முதல்வர் நாற்காலிக்காக சண்டையிடுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

