ADDED : ஏப் 30, 2026 12:16 AM
உடுப்பி: உடுப்பியில் டேங்கர் லாரி, சரக்கு லாரி மீது சுற்றுலா பஸ் மோதியதில், மூவர் உயிரிழந்தனர்.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் உள்ள ரம்பாபுரி கல்லுாரியை சேர்ந்த பி.காம். , மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் உட்பட 61 பேர் உடுப்பிக்கு நேற்று முன்தினம் பஸ்சில் மூன்று நாள் சுற்றுலா புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை முருடேஷ்வர் சென்று விட்டு, உடுப்பிக்கு சென்று கொண்டிருந்தனர். உடுப்பி மாவட்டம் பைந்துார் தாலுகாவில் உள்ள டி.ராசி அருகே வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி, பின், சரக்கு லாரி மீது பின்புறமாக மோதியது.
மோதிய வேகத்தில் பஸ் ஓட்டுநர் ரகு, கிளீனர் ரங்கநாத், சமையல் ஊழியர் ஹேம்நாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியில் இருந்த பொது மக்கள், பஸ்சுக்குள் சிக்கிய மாணவர்களை மீட்டனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கங்கோலி போலீசார் விசாரிக்கின்றனர்.
