ADDED : ஏப் 30, 2026 12:10 AM
தார்வாட்: கஞ்சா பயன்படுத்தாத போதும், பணம் கேட்டு போலீசார் தொந்தரவு கொடுத்ததால், மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மூன்று போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவை சேர்ந்தவர் ஆதித்யா மகேரி, 22. தார்வாடில் உள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லுாரி அருகில் சக மாணவர்களுடன் ரூமில் தங்கியிருந்தார்.
இந்த ரூமில் உள்ள மாணவர்கள், கஞ்சா புகைப்பதாக வித்யாகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 25ல் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா பயன்படுத்தியதாக கூறி, ஆதித்யா மகேரி உட்பட 18 மாணவர்களை கைது செய்தனர்.
மருத்துவமனையில் மாணவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், ஆதித்யா கஞ்சா புகைக்கவில்லை என்பது நிரூபணமானதால், விடுவிக்கப்பட்டார்.
ஆனாலும் அவரிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது தாயாரை தொடர்பு கொண்ட ஆதித்யா, நடந்த சம்பவங்களை கூறி, 2,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
இதற்கிடையில், மனவேதனை அடைந்த மாணவர் ஆதித்யா, கடந்த 27ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அவரது தாயார், 'கஞ்சா பயன்படுத்தவில்லை என்று தெரிந்தும், என் மகனிடம் பணம் கேட்டு போலீசார் மிரட்டினர். அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார்' என, தெரிவித்தார்.
இந்நிலையில், நகர போலீஸ் கமிஷனர் சசி குமார் அளித்த பேட்டி:
இறந்த மாணவரின் பெற்றோர், யு.டி.ஆர்., எனும் இயற்கைக்கு மாறான மரணம் என்ற வகையில் புகார் அளித்து உள்ளனர். ஆதித்யாவுக்கு நடந்த பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று அறிக்கை வந்துள்ளது.
ஆனாலும் போலீசார் 2,000 ரூபாய் கேட்டதாக, பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சூழ்நிலையில், பொது மக்களிடம் தவறான எண்ணம் உருவாகக்கூடாது என்பதால், வித்யாகிரி போலீஸ் நிலையத்தின் தலைமை ஏட்டு சந்துரு நடுவினமணி, ஏட்டுகள் குரான் டொக்கன்னவர், சையது தாசில்தார் ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
