துங்கபத்ரா ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் உயிரிழப்பு
துங்கபத்ரா ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் உயிரிழப்பு
ADDED : ஆக 19, 2026 11:20 PM
விஜயநகரா: மீன் பிடிக்க சென்ற மூன்று இளைஞர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருவரின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது. பிறர் மாயமாகியுள்ளனர்.
விஜயநகரா மாவட்டம், ஹகரி பொம்மனஹள்ளி தாலுகாவின், தம்ப்ரள்ளி கிராமத்தில் வசித்தவர்கள் ராஜா, 22, யமனுாரப்பா, 20, அஜ்ஜப்பா, 26. இவர்கள் கிராமம் அருகே பாயும் துங்கபத்ரா ஆற்றில், அவ்வப்போது மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதே போல, நேற்று முன் தினம் மதியம் படகில் மீன் பிடிக்க சென்றனர்.
ஆற்றின் நடுவே ஆழமான பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மழை பெய்ததுடன், பலத்த காற்று வீசியது. காற்றின் வேகம் தாங்காமல் படகு கவிழ்ந்ததால், மூவரும் நீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்தும், அவர்களால் கரையேற முடியவில்லை. ஆற்றில் இழுத்து செல்லப்பட்டனர்.
மீன் பிடிக்க சென்றவர்கள், இரவாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களை தேட துவங்கினர். பல இடங்களில் தேடியும் எங்கும் தென்படாததால், தம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் கிராமத்துக்கு வந்து இளைஞர்களை தேடினர். காற்று, மழையால் படகு மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார், கிராமத்தினர் உதவியுடன் நேற்று அதிகாலையில் இருந்தே, ஏரியில் தேடினர்.
அப்போது, யமனுாரப்பாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான இருவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
