ADDED : ஏப் 24, 2026 04:18 AM
துமகூரு: துமகூரு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ஒரே வாரத்தில், 32 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால், பறவைகள் ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
துமகூரு மாவட்டத்தின் பொம்மனஹள்ளி, கோளிஹள்ளி, பைரசந்திரா, ஹுல்லேனஹள்ளி கிராமங்களில், கடந்த ஒரு வாரத்தில், 32 மயில்கள் இறந்தன. இதைக்கண்ட கிராமத்தினர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டனர்.
உணவில் விஷம் வைத்து மயில்களை கொன்றிருக்கலாம் என, கிராமத்தினர் சந்தேகிக்கின்றனர். மயில்களின் மாதிரிகளை சேகரித்து, தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். அறிக்கை வந்த பின், மயில்களின் இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியும்.
வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. உதவி வன பாதுகாப்பு அதிகாரி தலைமையில், குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததாலும், மயில்கள் இறந்திருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
