ADDED : ஆக 01, 2026 06:38 AM
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள, 37 அரசு பி.யு., கல்லுாரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் அரசு பி.யு., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கல்வித்துறை சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்லுாரியில் சேருவதற்கான கால அவகாசம், ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தாமதமாக சேருவதற்கான சேர்க்கை கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், நடப்பு கல்வியாண்டில், மாநிலத்தில் உள்ள 37 அரசு பி.யு., கல்லுாரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை.
இது குறித்து, அரசு பி.யு., கல்லுாரிகள் இயக்குநர் பாரத் கூறியதாவது:
இந்த கல்வியாண்டில் மாண்டியாவில் 5 கல்லுாரிகள்; துமகூரு 5; ஷிவமொக்கா 4; ராம்நகர் 4; பெலகாவி 3; சிக்கமகளூரு 3; தாவணகெரே 3; விஜயநகரா 3; பெங்களூரு வடக்கு 2; சிக்கபல்லாபூர் 2; ஹாசன் 2; உடுப்பி 1 என மொத்தம், 37 அரசு பி.யு., கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
இந்த பட்டியலில் கல்வியில் சிறந்து விளங்கும் உடுப்பியிலும் ஒரு கல்லுாரி உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள, 57 பி.யு., கல்லுாரிகளில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பட்டியலில் ஹாசன் மாவட்டம், ஏழு கல்லுாரிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதற்கு காரணம் அருகருகே கல்லுாரிகள் இருப்பதே. இதனால், மாணவர் சேர்க்கை குறைந்திருக்கலாம். தனியார் கல்லுாரிகள் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது.
அரசு கல்லுாரிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், அரசு கல்லுாரிகள் இயங்கும் இடங்களுக்கு தனியார் கல்லுாரிகள் திறக்க மாநில அரசு அனுமதியளிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
