ADDED : மே 16, 2026 03:31 AM
விஜயநகரா: செங்கல் தயாரிப்பு தொழிற்கூடத்தில், கொத்தடிமைகளாக இருந்த, ஒடிஷா மாநிலத்தின், 37 தொழிலாளர்களை, மாவட்ட அதிகாரிகள் மீட்டனர்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின், நந்திபன்டி கிராமத்தில், சீனிவாஸ், மகாதேவ ராவ், வெங்கட பிரசாத் ஆகியோருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இவர்கள் தொழிலாளர்கள் பலரை, ஷெட்டில் அடைத்து வைத்து, பலவந்தமாக வேலை வாங்கினர்; தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர் என, வருவாய் துறையினருக்கு புகார்கள் சென்றன.
அதுபோல, இது குறித்து, பெலகாவியின், 'ஸ்பந்தனா' அமைப்பினருக்கும் தெரிய வந்தது. அவர்கள் செங்கல் தொழிற்சாலைக்கு சென்று, பார்வையிட்ட போது, தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது தெரிந்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், நேற்று காலை அங்கு சென்று திடீர் சோதனை நடத்தி, 37 தொழிலாளர்களை மீட்டனர். இவர்கள் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
ஒரு குடும்பத்துக்கு 40,000 ரூபாய் முன் பணம் கொடுத்து, அங்கிருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு வாரம், 500 ரூபாய் மட்டுமே, ஊதியமாக வழங்கப்பட்டது. ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்கியதும் விசாரணையில் தெரிந்தது.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும், ரயிலில் ஒடிஷாவுக்கு விஜயநகரா மாவட்ட கலெக்டர் கவிதா மன்னிகேரி அனுப்பி வைத்தார்.
இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த, செங்கல் சூளையின் உரிமையாளர்கள் மூவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
