/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி 38 எம்.எல்.ஏ.,க்கள்... போர்க்கொடி! தங்களுக்கு வாய்ப்பு வழங்கக்கோரி ராகுலுக்கு கூட்டாக கடிதம்
/
அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி 38 எம்.எல்.ஏ.,க்கள்... போர்க்கொடி! தங்களுக்கு வாய்ப்பு வழங்கக்கோரி ராகுலுக்கு கூட்டாக கடிதம்
அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி 38 எம்.எல்.ஏ.,க்கள்... போர்க்கொடி! தங்களுக்கு வாய்ப்பு வழங்கக்கோரி ராகுலுக்கு கூட்டாக கடிதம்
அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி 38 எம்.எல்.ஏ.,க்கள்... போர்க்கொடி! தங்களுக்கு வாய்ப்பு வழங்கக்கோரி ராகுலுக்கு கூட்டாக கடிதம்
ADDED : பிப் 24, 2026 06:22 AM

கர்நாடக காங்கிரசில், முதல்வர் பதவி விஷயத்தில் இழுபறி நடக்கிறது. இதே காரணத்தால், சித்தராமையா, சிவகுமார் ஆதரவாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கட்சி மற்றும் அரசில் குழப்பம் அதிகரிக்கும் நிலையில், அதை சரி செய்யாத காங்., மேலிடத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு பக்கம் துணை முதல்வர் சிவகுமார், அவ்வப்போது டில்லிக்கு சென்று வருகிறார். மற்றொரு பக்கம் முதல்வர் சித்தராமையா, தன் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
'முதல்வர் பதவி குறித்து வாய் திறக்க வேண்டாம்' என, காங்., மேலிடம் பல முறை எச்சரித்தும், சிவகுமார், சித்தாரமையா ஆதரவாளர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே மேலிடமும் எதையும் செய்ய முடியாமல் கையை பிசைகிறது. இவர்களை அடக்க முடியாது என்ற, இயலாமையில் உள்ளது.
இதற்கிடையில், அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர். சித்தராமையா அரசின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். தங்களுக்கு பதவி கிடைக்கும் என, எம்.எல்.ஏ.,க்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களின் ஆசை நிராசையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், குறைந்தபட்சம் பத்து அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டினார்.
நீக்க வேண்டிய அமைச்சர்கள், புதிதாக சேர்க்க வேண்டியவர்கள் பட்டியலுடன், டில்லிக்கும் சென்று வந்தார். அதற்கு மேலிடம் ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போதைக்கு எந்த மாற்றமும் வேண்டாம் என்று கூறியதால் முதல்வரும் மவுனமாகியுள்ளார். அவர் மீண்டும் பட்டியலுடன், டில்லிக்கு செல்வார் என, எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. தன் பதவியை தக்க வைத்து கொள்வதே, முதல்வருக்கு பெரும்பாடாக உள்ளது.
இத்தகைய சூழலில், அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து அவர் ஆலோசிக்கமாட்டார் என்பதை, எம்.எல்.ஏ.,க்கள் உணர்ந்துள்ளனர். தாங்களே மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் சார்பில், 38 பேர், முதன்முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இளைஞர்கள். இம்முறை தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, மன்றாடுகின்றனர்.
அதனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோருக்கு, பிரதீப் ஈஸ்வர், நயனா மோட்டம்மா, சீனிவாஸ், இக்பால் ஹூசேன், அசோக்குமார் ராய், தர்ஷன் துருவ நாராயணா உட்பட, 38 எம்.எல்.ஏ.,க்கள் எழுதியுள்ள கடிதம்:
சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையை உடனடியாக மாற்றி அமையுங்கள். கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும். முதன் முறையாக வெற்றி பெற்ற எங்களுக்கு, அமைச்சர் பதவி தாருங்கள். காங்கிரசுக்கு இளைஞர்களின் சேவை தேவை.
இதற்கு முன் பல அரசுகளில், முதன் முறையாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வரான உதாரணமும் உள்ளது. புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால், அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற உதவியாக இருக்கும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களின் இந்த திடீர் கடிதம், காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

