பெங்களூரில் ஒரே நாளில் 4 கிருஷ்ணர் கோவில் தரிசனம்
பெங்களூரில் ஒரே நாளில் 4 கிருஷ்ணர் கோவில் தரிசனம்
ADDED : செப் 01, 2026 03:11 AM

பெங்களூரு: வரும் 4ம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளன்று, துாரத்தில் உள்ள ஊர்களுக்கு செல்ல முடியாதவர்கள், ஒரே நாளில் பெங்களூரில் உள்ள நான்கு கிருஷ்ணர் கோவிலை தரிசிக்கலாம்.
இஸ்கான் கோவில் பெங்களூரின் ராஜாஜி நகரில், இஸ்கான் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இது, ஆசியாவிலேயே மிகப்பெரிய இஸ்கான் கோவில்களில் ஒன்றாகும்.
அமைதியான சூழ்நிலையில் கோவில் உள்ளது. வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட கோவில், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இங்குள்ள கிருஷ்ணரை தரிசனம் செய்தால், மனதுக்கு அமைதி, நிம்மதி கிடைக்கும்.
இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், சிறப்பு கீர்த்தனைகள், பஜனைகள் நடக்கும். லட்சக்கணக்கான பூக்களால், ராதா, கிருஷ்ணர் அலங்கரிக்கப்படுவர்.
பல விதமான அபிஷேகங்கள் நடக்கும். திவ்யமான அலங்காரத்தில் காட்சியளிக்கும் ராதா கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ண பலராமரை தரிசித்து, சுற்றுலாவை துவக்கலாம்.
கோவர்த்தன குகை கோவில் பசவனகுடியில் கோவர்த்தன குகை கோவில் உள்ளது. கற்குகை போன்ற சிறிய பாதையில் நடந்து சென்றால், ஸ்ரீகிருஷ்ணர் தன் சுண்டு விரலால், கோவர்த்தன மலையை துாக்கி நின்றுள்ள விக்ரகத்தை தரிசிக்கலாம். சிறப்பு பூஜைகளில் பங்கேற்று மன நிறைவோடு திரும்பலாம். கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு, தரிசனம் செய்ய வேண்டிய கோவில்களில், இதுவும் ஒன்றாகும்.
ஸ்ரீகிருஷ்ணர் கோவில் இந்திரா நகரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இது, சின்மயா மிஷன் நிர்வாகத்தில் செயல்படுகிறது. பெங்களூரின் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையிலும், கோவிலில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. வெண்மை நிற கோபுரம், கிருஷ்ணர் விக்ரகம் பக்தர்களை சுண்டி இழுக்கிறது.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளன்று, மாலை, கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். கிருஷ்ணரை தரிசனம் செய்து, நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்.
எட்னீர் மடத்தின் கிருஷ்ணர் கோவில் பெங்களூரின், கோரமங்களாவில் எட்னீர் மடத்தின் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இதுவும் பக்தர்களை ஈர்க்கும் கோவிலாகும். கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளன்று, இரவு மஹா மங்களாரத்தி, பஜனைகள் நடப்பது வழக்கம். பக்தர்கள் இதில் பங்கேற்கலாம்.
நான்கு கிருஷ்ணர் கோவில்கள் அமைந்துள்ள ராஜாஜி நகர், இந்திரா நகர், பசவனகுடி, கோரமங்களா ஆகிய பகுதிகளுக்கு, பி.எம்.டி.சி., பஸ்கள், வாடகை வாகனங்கள் இயங்குகின்றன. மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது. இதனால், ஒரே நாளில் நான்கு கோவில்களையும் தரிசிக்கலாம்.
