ADDED : செப் 01, 2026 03:12 AM

மைசூரு: ஹொசகொலளு கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் நடமாடி மக்களை அச்சுறுத்திய புலி, வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் நேற்று சிக்கியது.
மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டே தாலுகாவின், ஹொசகொலளு கிராமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், சில நாட்களாக ஒரு புலி நடமாடியது. அவ்வப்போது மக்களின் கண்களில் தென்பட்டு அச்சுறுத்தியது.
வெளியே நடமாடவே கிராமத்தினர் தயங்கினர். குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவதிப்பட்டனர். தினமும் வயல், தோட்டத்துக்கு செல்ல, விவசாயிகள் அஞ்சினர். புலியை பிடிக்கும்படி வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர், கிராமத்துக்கு வந்து, புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அதிகமாக நடமாடிய இடத்தில் மூன்று நாட்களுக்கு முன், கூண்டு வைத்தனர். நேற்று காலை உணவு தேடி வந்த புலி, கூண்டில் சிக்கியது. இதை பார்த்த கிராமத்தினர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர், புலியை கபினி அணை பகுதியில் உள்ள காகனகோட்டே வனத்தில் கொண்டு விட முடிவு செய்துள்ளனர். புலி சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.
