/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனில் ஒரே நாளில் மாரடைப்புக்கு 4 பேர் பலி
/
ஹாசனில் ஒரே நாளில் மாரடைப்புக்கு 4 பேர் பலி
ADDED : ஜூலை 04, 2025 05:18 AM
ஹாசன்: ஹாசனில் ஒரே நாளில் நால்வர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
ஹாசன் மாவட்டத்தில், இரண்டு மாதங்களாக மாரடைப்புக்கு பலியாவோர் எண்ணிக்கை, திடீரென அதிகரித்துள்ளது.
ஹாசன், ஆலுார் தாலுகாவின், கல்லாரே கிராமத்தில் வசித்தவர் சந்தோஷ், 41, இவர் காரகோடு கிராம பஞ்சாயத்து கவுன்சிலர். நேற்று முன் தினம் நள்ளிரவு, உறக்கத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை குடும்பத்தினர் அறியவில்லை.
நேற்று காலை அவர் எழுந்திருக்கவில்லை. இதை கண்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
சகலேஸ்புரா தாலுகாவின், பெளகோடு பேரூராட்சியின் சிக்கநாயகனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் விருபாக்ஷா, 70. இவருக்கு நேற்று அதிகாலை 1:30 மணியளவில், மாரடைப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சகலேஸ்புரா தாலுகாவின், அரகெரே கிராமத்தில் வசித்தவர் தேவம்மா, 72. இவருக்கு நேற்று முன்தினம், நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவரை குடும்பத்தினர், பெங்களூரின் ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர். மீண்டும் கிராமத்துக்கு திரும்பும் வழியில் உயிரிழந்தார்.
ஹாசன் நகரின் கரிகவுடா காலனியில் வசித்தவர் சம்பத்குமார், 53. இவருக்கு நேற்று அதிகாலை இதய வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் ஹிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஹாசன் சுற்றுப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு பேர் மாரடைப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மாரடைப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.