/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., செயற்குழுவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
பா.ஜ., செயற்குழுவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : பிப் 20, 2026 04:57 AM

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கர்நாடக பா.ஜ., செயற்குழு கூட்டம், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்தது. மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்திய முன்னாள் முதல்வர் எடியூரப்பா கவுரவிக்கப்பட்டார்.
இதையடுத்து பெங்களூரை குப்பை மேடாக மாற்றியதற்கு எதிர்ப்பு; மக்கள் கஷ்டங்களுக்கு செவிசாய்க்காத அரசை கண்டித்து தெருவில் இறங்கி போராடுவது; எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தியது; ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு கண்டனம் என்று, அரசுக்கு எதிராக நான்கு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், கஜேந்திர ஷெகாவத் பேசியதாவது:
ஜி.பி.ஏ., மற்றும் உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சபதம் எடுக்க வேண்டும். வரும் 2028 தேர்தலில் நமக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி.
கட்சியின் சித்தாந்தம், தத்துவத்தை வலுப்படுத்துவோம். காங்கிரஸ் அரசின் தோல்வியை வீடு, வீடாக சென்று செல்வோம்.
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள் கர்நாடகாவை சேர்ந்தவை. இது தான் இந்த மண்ணின் சக்தி. கலாசாரம் நிறைந்த இந்த மாநிலத்தை, ஊழல் நிறைந்த மாநிலமாக காங்கிரஸ் மாற்றுகிறது.
முதல்வர் பதவிக்காக சண்டை போடுகின்றனர். போதை பொருள் மாபியா அதிகரித்து உள்ளது. கடந்த 2023 தேர்தலில் நாம் அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

