ADDED : ஏப் 09, 2025 07:11 AM

சாம்ராஜ் நகர் : உணவு தேடி கிராமத்துக்கு வந்த 40 வயது ஆண் யானை, மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பண்டிப்பூர் சரணாலயத்துக்கு உட்பட்ட அலத்துார் கிராமத்தில், ராஜேஷ் என்பவர் விவசாய நிலம் வைத்துள்ளார்.
விளைச்சலை பாதுகாக்க, நிலத்தை சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு தேடி வந்த 40 வயது ஆண் யானை, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது.
நேற்று காலை அவ்வழியாக வந்த கிராமத்தினர், யானை உயிரிழந்தது தொடர்பாக, ஓம்காரா வனப்பகுதி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த ராஜேஷிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இத்தகவல் அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நேற்று சாம்ராஜ் நகரின் புவனேஸ்வரி சதுக்கத்தில் நின்று, 'பண்டிப்பூரை காப்பாற்றுங்கள்' என்ற பெயர் பலகையுடன், 'பண்டிப்பூரில் இரவு நேர வாகன போக்குவரத்து தடையை நீக்க வேண்டாம்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தடை தொடர வேண்டும்' என வலியுறுத்தினர்.
