/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'புளோரைடு' கலந்த குடிநீர் 47 பேருக்கு சிறுநீரக பாதிப்பு
/
'புளோரைடு' கலந்த குடிநீர் 47 பேருக்கு சிறுநீரக பாதிப்பு
'புளோரைடு' கலந்த குடிநீர் 47 பேருக்கு சிறுநீரக பாதிப்பு
'புளோரைடு' கலந்த குடிநீர் 47 பேருக்கு சிறுநீரக பாதிப்பு
ADDED : பிப் 03, 2026 06:06 AM
சாம்ராஜ்நகர்: 'புளோரைடு' கலந்த குடிநீர் பயன்படுத்தியதால், சுள்யாடி மற்றும் மார்டள்ளி கிராமங்களில் 47 பேரின் சிறுநீரகம் பழுதடைந்துள்ளது. பலரும் உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், சுள்யாடி, மார்டள்ளி கிராமங்களுக்கு, கடந்த 30 ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து குடிநீர் வினியோகிக்கிறது. புளோரைடு கலந்த குடிநீர் வழங்குவதால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதித்துள்ளது. இரண்டு கிராமங்களின் 47 பேருக்கு, சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளன. இவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். பலரும் தைராய்டு, ஹைபர் டென்ஷன் உட்பட, கடுமையான நோய்களால் அவதிப்படுவது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. தற்போது கிடைக்கும் நீரில் புளோரைடு அம்சம் அதிகம் உள்ளது. இதை பயன்படுத்தும் மக்கள் நோய்களால் பாதிப்படைகின்றனர். பலரின் பற்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.
சுத்தமான குடிநீர் வினியோகிக்கும்படி, கிராம பஞ்சாயத்திடம் பல ஆண்டுகளாக மன்றாடியும் பயன் இல்லை. பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகமும் அக்கறை காட்டவில்லை.
வேறு வழியின்றி ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிட்டு, டேங்கர் தண்ணீர் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மார்டள்ளி கிராமத்தில் அசுத்த நீரால், மக்கள் பா திப்படைந்தது மட்டுமின்றி, போலீசாரும் கூட நோய்களுக்கு ஆளாகினர். பல ஆண்டுகளுக்கு முன், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க சென்ற கர்நாடக போலீசார், மார்டள்ளி கிராமத்தில் முகாமிட்டிருந்தனர். இங்கு பணியில் இருந்த இரண்டு போலீசாருக்கு, சிறுநீரக பிரச்னை தென்பட்டது. அப்போது குடிநீரை ஆய்வு செய்ததில், புளோரைடு அம்சம் அதிகம் இருப்பது தெரிந்தது.
இப்போதும் கிராமத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல், மக்கள் பரிதவிக்கும் நிலை மாறவில்லை.

