ADDED : மே 04, 2026 10:58 PM
பெங்களூரு: பெங்களூரில் சமீபத்தில் பெய்த பேய் மழையில் வேரோடு சாய்ந்த, 491 மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக ஜி.பி.ஏ., தெரிவித்துள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பேய் மழையில் பெரும் சேதம் ஏற்பட்டது. சிவாஜிநகர் பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில், ஏழு பேர் உயிரிழந்தனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் சாலையில் விழுந்து கிடந்தன. இது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது.
சாலையில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில், ஜி.பி.ஏ., என்ற கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இது குறித்து, ஜி.பி.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
சமீபத்தில் பெய்த மழையில், பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சியில் 136; கிழக்கு மாநகராட்சியில் ஏழு; மேற்கு மாநகராட்சியில் 172; தெற்கு மாநகாரட்சியில் 135; வடக்கு மாநகராட்சியில் 41 என மொத்தம், 491 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவை அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட்டு உள்ளன.நகரில், காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கும். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
