ADDED : அக் 22, 2025 01:26 AM
விசா காலம் முடிந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்... கர்நாடகாவில் குற்றங்களில் ஈடுபடுவதால் தலைவலி நாடு கடத்தும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம்
உலகளவில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு கல்வி, சுற்றுலா உட்பட பல விஷயங்களுக்காக மாணவர்கள் உட்பட பலர் வருகை தருகின்றனர்.
போதை அதிகரிப்பு கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகாவின் பெங்களூரில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்தது. இது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
போதைப்பொருள் புழக்கம் குறித்து போலீசார் விசாரித்தபோது, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், போதைப்பொருளை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இந்தாண்டு ஜன., 1 முதல் அக்., 8ம் தேதி வரை போலீசார் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போதைப்பொருள் கடத்தியாக, 35 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரித்தபோது, மருத்துவம், கல்வி, சுற்றுலா விசாவில் இவர்கள் இந்தியாவுக்கு வந்தது தெரிய வந்தது.
சட்ட விரோதம் இவ்வாறு வருபவர்கள் விசா காலம் முடிந்த பின், பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடகாவுக்கு வரும் பலர், மாநிலத்தின் பல மாவட்டங்களில் சட்டவிரோதமாக குடியேறி, குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து மாநிலம் முழுதும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, சட்ட விரோதமாக தங்கியிருந்த 525 பேரை கண்டுபிடித்தனர். இவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி, 310 பேரை நாடு கடத்தப்பட்டனர்.
மற்றவர்களை நாடு கடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனை இது தொடர்பாக சமீபத்தில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 12 நாடுகளை சேர்ந்த துாதரக அதிகாரிகளுடன், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் ஒருங்கிணைப்பு ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், கர்நாடகாவுக்கு வரும் வெளிநாட்டினர் விபரத்தை, போலீசாருக்கு சம்பந்தப்பட்ட நாட்டின் துாதரக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அத்துடன் இவ்வாறு வருபவர்கள் விசா காலம் முடிந்த பின், சட்ட விரோதமாக குடியேறி, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்:
பெங்களூரில் போதைப் பொருள் வினியோகம், திருட்டு வழக்குகளை விசாரிக்கும்போது, வெளிநாடுகளை சேர்ந்த நபர்கள் அதிகளவில் பிடிபடுகின்றனர். குறிப்பாக நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர்கள், அதிகளவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தது.
விபரம் அத்துடன், வெளிநாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்கள், அவர்கள் தங்கும் பகுதிக்கு உள்ளிட்ட விபரங்களை உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், வெளிநாட்டினருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவும் உதவும்.
தற்போது சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்க, அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களை கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

