கர்நாடக சிறை பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர் 550 பேர் நியமனம்
கர்நாடக சிறை பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர் 550 பேர் நியமனம்
ADDED : ஏப் 28, 2026 04:22 AM
பெங்களூரு: கர்நாடக மாநில சிறைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறையைப் போக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் முன்னாள் ராணுவத்தினர் 550 பேரை வார்டன்களாக நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.---
சிறைகளுக்குள் மொபைல் போன்கள், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகின்றன. சிறைகளில் காவலர்கள் குறைவாகவோ அல்லது இல்லாத பகுதிகளிலோ, சிலர் அவற்றை வெளியிலிருந்து சிறையினுள் வீசியெறிந்தது விசாரணையில் தெரிய வந்தது.
சிறைகளில் 1,200க்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடி ஏற்படுவதும், சிறைச்சாலைகளில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு அவசியம் என்பதும் சிறைத் துறை விசாரணையில் தெரியவந்தது.
நிரந்தரமாக காவலர்களை நியமிக்கும் வரை, தற்காலிகத் தீர்வாக முன்னாள் ராணுவ வீரர்களை சிறை பாதுகாப்பில் ஈடுபடுத்த சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கம் மூலம் 550 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் முன்னாள் ராணுவத்தினர் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர்.
சி றைத் துறையில் தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடித் தேர்வுகள் மூலம் தாமதம் ஏற்படுவதால், உடனடித் தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை உட்பட மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு சிறைகளில் இவர்கள் பணியமர்த்தப்படுவர். முன்னாள் ராணுவத்தினர் ஏற்கனவே முறையான பயிற்சி பெற்றவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள் என்பதால், சிறை பாதுகாப்பை கையாளுவதில் அவர்கள் சிறந்த பங்களிப்பை வழங்குவர் என அரசு எதிர்பார்க்கிறது.
