ADDED : அக் 05, 2025 03:58 AM

பெங்களூரு: ''மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஐந்தாவது ரயில் விரைவில் இயக்கப்படும்,'' என, நம்ம மெட்ரோ நிர்வாக இயக்குநர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை, ஆகஸ்ட் 11ம் தேதி துவங்கப்பட்டது. இந்த மஞ்சள் வழித்தடத்தில் முதல்கட்டமாக மூன்று ரயில்கள், 25 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன. இதனால் பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த மாதம் 10ம் தேதி நான்காவது ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 19 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் ஐந்தாவது ரயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து நம்ம மெட்ரோ நிர்வாக இயக்குநர் ரவிசங்கர் கூறியதாவது:
மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஐந்தாவது ரயில், கடந்த மாதம் 30ம் தேதி ஹெப்பகோடி பணிமனைக்கு வந்தது. தற்போது, பரிசோதனை நடக்கிறது. இறுதியாக சோதனை ஓட்டம் நடக்கும். இதன் பின்னரே ஐந்தாவது ரயில் பயணியர் இயக்கத்திற்கு வரும். அப்போது, மஞ்சள் பாதையில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
