/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீதரில் மர்ம பொருள் வெடித்ததில் ஐந்து மாணவர்கள் உட்பட 6 பேர் காயம்
/
பீதரில் மர்ம பொருள் வெடித்ததில் ஐந்து மாணவர்கள் உட்பட 6 பேர் காயம்
பீதரில் மர்ம பொருள் வெடித்ததில் ஐந்து மாணவர்கள் உட்பட 6 பேர் காயம்
பீதரில் மர்ம பொருள் வெடித்ததில் ஐந்து மாணவர்கள் உட்பட 6 பேர் காயம்
ADDED : பிப் 01, 2026 05:01 AM

பீதர்: பீதரில் மர்ம பொருள் வெடித்ததில், பள்ளிக்கு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் ஐந்து பேர் மற்றும் முதியவர் ஒருவர் என, ஆறு பேர் காயம் அடைந்தனர்.
பீதர் மாவட்டம் ஹும்னாபாத்தின் மொலகெரா கிராமத்தில், நேற்று காலை மாணவர்கள் உட்பட சிலர் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் மர்ம வெடிபொருள் வெடித்தது. இதில், 65 வயது முதியவர் மற்றும் ஐந்து பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள், காயம் அடைந்தவர்களை பீதரில் உள்ள பிரிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில், இரு மாணவர்களின் நிலை மோசமாக இருந்ததால், ஒருவர் ஹைதராபாத்துக்கும், மற்றொருவர் சோலாபூருக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ஹும்னாபாத் போலீசார் அங்கு வந்து, யாரும் அருகில் செல்லாதபடி, அப்பகுதி முழுதும் சீல் வைத்தனர். எஸ்.பி., பிரதீப் ஹுண்டி அங்கு வந்து ஆய்வு செய்தார். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் வந்து வெடி பொருட்களை ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர்.
'கடந்த ஆறு மாதங்களில், ஐந்தாவது முறையாக இதுபோன்று மர்ம பொருள் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காத வகையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை' என, கிராமத்தினர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இச்சம்பவத்தால் கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தனது 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மொலகெரா கிராமத்தில் மர்ம பொருள் வெடித்ததில், ஆறு பேர் காயமடைந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கவும், அதற்கான செலவுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்கவும் உத்தரவிட்டு உள்ளேன். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி.,யும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்து உள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
வெடிப்புக்கு என்ன காரணம், என்ன பொருள் பயன்படுத்தப்பட்டது, அது எப்படி அங்கு சென்றது, எந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

