ADDED : ஆக 05, 2026 11:07 PM
மங்களூரு: மங்களூரின் பிரபலமான தனியார் கல்லுாரியில், ராகிங் கொடுமையால் ஜூனியர் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில், சீனிவாஸ் என்ற தனியார் கல்லுாரி உள்ளது. இங்கு சீனியர் மாணவர்கள், ராகிங் பெயரில் ஜூனியர் மாணவர்களுக்கு, பல விதங்களில் தொந்தரவு கொடுக்கின்றனர்.
குறிப்பாக,கேரள மாணவர்கள், தங்களின் ஜூனியர்களை சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்லுாரிக்குள் மட்டுமின்றி, கல்லுாரிக்கு வெளியே உள்ள தங்களின் அறைகளுக்கு, மாணவர்களை அழைத்து சென்று, உடைகளை கழற்றி உள்ளாடைகளுடன் அமர வைத்து, அவமதிக்கின்றனர்.
அவர்கள் அறைக்கு அழைக்கும் போது, செல்ல மறுத்தால் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்துவதாக, ஜூனியர் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதே போல, இரண்டு மாணவர்களை பலவந்தமாக, அறைக்கு அழைத்து சென்று, வாயால் காற்றை ஊதி எல்.இ.டி., பல்பை அணைக்கும்படியும், மின் விசிறியை சுற்ற வைக்கும்படியும் கட்டாயப்படுத்திஉள்ளனர்.
சீனியர் மாணவர்களின் சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பொறுமை இழந்த இரண்டு ஜூனியர் மாணவர்கள், நேற்று முன்தினம் பாண்டேஸ்வரா போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தனர்.
இதையடுத்து, கல்லுாரிக்கு வந்து, விசாரணை நடத்திய போலீசார், ஆறு மாணவர்களை கைது செய்து, அழைத்து சென்றனர். அவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
