6 மாணவர்களின் ஐ.ஏ.எஸ்., கனவுக்கு பெங்களூரு சாலை பள்ளம் 'வேட்டு'
6 மாணவர்களின் ஐ.ஏ.எஸ்., கனவுக்கு பெங்களூரு சாலை பள்ளம் 'வேட்டு'
ADDED : மே 24, 2026 11:29 PM

பெங்களூரு: சாலை பள்ளங்களால் சரியான நேரத்திற்கு, தேர்வு மையத்திற்கு வர முடியாததால், ஆறு மாணவர்களின் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
கர்நாடக தலைநகராக விளங்கும் பெங்களூரு நகரின் அனைத்து இடங்களிலும், கடந்த ஏழு ஆண்டுகளாக, சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. 1 கி.மீ., துாரத்தில் உள்ள சாலைகளை கடக்கவே, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
சாலை பள்ளங்களால் அவ்வப்போது விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
ஜி.பி.ஏ.,க்கு உட்பட்ட ஐந்து மாநகராட்சிகளுக்கும், தேர்தல் நடக்காத காரணத்தால், கவுன்சிலர்கள் இல்லாததால், மக்களால் யாரிடமும் சென்று குறைகளை சொல்ல முடிவது இல்லை. மக்கள் கூறும் குறைகளை, அதிகாரிகள் தங்கள் காதுகளில் வாங்கி கொள்வதும் இல்லை.
கேட் மூடப்பட்டது இந்நிலையில், சாலை பள்ளங்களால் சரியான நேரத்திற்கு, தேர்வு மையத்திற்கு வர முடியாததால், ஆறு மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு, தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து உள்ளனர்.
இதுபற்றிய விபரம்:
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்காக, பெங்களூரு சாளுக்யா சதுக்கம் பகுதியில் உள்ள ஆர்.சி., கல்லுாரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தன.
காலை 9:30 மணி முதல், 11:30 மணி வரை தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையத்திற்கு மூன்று மாணவர்கள், மூன்று மாணவியர் காலை 9:35 மணிக்கு வந்தனர்.
அதற்குள் நுழைவுவாயில் கேட் மூடப்பட்டது. மாணவ, மாணவியர் தங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டும், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆறு பேராலும் தேர்வு எழுத முடியாமல் போனது.
படித்தது வீண் இதுகுறித்து, தேர்வு எழுத வந்த பிரமோத் என்பவர் கூறியதாவது:
என் வீடு ஒயிட்பீல்டு இம்மடஹள்ளி ரோட்டில் உள்ளது. தேர்வு மையத்திற்கு வருவதற்காக வீட்டில் இருந்து, காலை 7:00 மணிக்கு புறப்பட்டேன். இம்மடஹள்ளியில் இருந்து மஹாதேவபுரா வரை செல்லும், சாலை படுமோசமாக இருப்பதால், ஆட்டோவுக்கு முன்பதிவு செய்தும், ஒரு ஆட்டோவும் அங்கு வரவில்லை.
இதனால், நடைபாதையில் சிறிது துாரம் நடந்து வந்து, ஆட்டோ பிடித்து ஒயிட் பீல்டு மெட்ரோ நிலையம் அடைந்தேன். அங்கிருந்து மெஜஸ்டிக் வந்து, ஆட்டோ மூலம் தேர்வு மையத்திற்கு வந்தேன். நான் வருவதற்கு, 5 நிமிடம் தாமதமாகி விட்டது. என்னை தேர்வு எழுத செல்ல அனுமதிக்கவில்லை. நான் வர தாமதம் ஆனதற்கு காரணம், சாலையின் மோசமான நிலை தான். கடந்த ஏழு ஆண்டுகளாக இம்மடஹள்ளி ரோடு மோசமான நிலையில் உள்ளது. யாரும் கண்டுகொள்வது இல்லை.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, போக்குவரத்து நெரிசல் குறைவு தான். அப்படி இருந்தே சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. மற்ற நாட்களில் தேர்வு நடந்தால் அவ்வளவு தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்தது வீண் ஆகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற, 5 மாணவ, மாணவியரும் சாலை பள்ளங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே, தேர்வு எழுத தாமதமாக வர காரணம் என்று கூறி நொந்து கொண்டனர்.
ஆக, மொத்தம் 6 மாணவ, மாணவியரின் ஐ.ஏ.எஸ்., கனவுக்கு, சாலை பள்ளங்கள் வேட்டு வைத்து உள்ளன. இனியாவது ஆட்சியாளர்கள் விழித்து கொள்வார்களா என்று கேள்வி எழுந்து உள்ளது.
