ADDED : ஏப் 22, 2026 01:40 AM

உத்தர கன்னடா: இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ஆயுர்வேத டாக்டர் கொலை வழக்கில், 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரகன்னடா மாவட்டம், சிர்சி தாலுகா கே.எச்.பி., காலனியின் புதிய லே - அவுட்டில் வசித்து வந்தவர் ரமேஷ் கலகுடுகரா, 51. இவர், ஆயுர்வேத டாக்டர். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர், உத்தரபிரதேசத்தில் டாக்டராக பணியாற்றுகிறார். மற்றொரு மகன், பெங்களூரில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
ரமேஷின் மனைவி, ஐந்து மாதங்களுக்கு முன், மாரடைப்பால் உயிரிழந்தார். தனியாக இருந்த ரமேஷ், மனைவியின் சகோதரி அன்னபூரணியை இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினார். கடந்த 20ம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
முதல் மனைவியின் தங்க நகைகளை, இரண்டாவது மனைவிக்கு கொடுக்க, வங்கியில் இருந்து எடுத்து வந்திருந்தார்.
திருமண நாளன்று ரமேஷின் வீட்டுக்கு, உறவினர்கள் சென்று கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரமேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிர்சி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மஞ்சுநாத் பாண்டுரங்க நாயக் என்ற 70 வயது முதியவரை கைது செய்தனர்.
கைதானவர், ஷிவமொக்கா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், அவரது ஆதார் அடையாள அட்டையின் முகவரியில் எல்லாபூர் என உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சிர்சி, சாந்தி நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு டாக்டர் ரமேஷ் அறிமுகமானார். சம்பவ தினத்தன்று டாக்டர் வீட்டில், மஞ்சுநாத் பாண்டுரங்க நாயக் தங்கினார்.
மறுநாள் காலை ஞாயிற்று கிழமை, டாக்டரிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதை கவனித்தார். இதை அபகரிக்கும் நோக்கில், ரமேஷை கொன்ற நாயக், தங்க நகைகள், பணத்துடன் தப்பியது தெரியவந்தது.
