7,000 பக்க விசாரணை அறிக்கை தர்மஸ்தலா வழக்கில் தாக்கல்
7,000 பக்க விசாரணை அறிக்கை தர்மஸ்தலா வழக்கில் தாக்கல்
ADDED : ஜூலை 15, 2026 11:46 PM
மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில், 7,000 பக்க விசாரணை அறிக்கையை, பெல்தங்கடி நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., தாக்கல் செய்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட, பெண்கள் உடல்களை புதைத்ததாக சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது. சின்னையா அடையாளம் காட்டிய இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் என எதுவும் கிடைக்கவில்லை.
தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே மற்றும் மஞ்சுநாதா கோவில் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, சின்னையா பொய் புகார் அளித்தது தெரிந்தது.
இந்த வழக்கில் ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரனே வேதிகே தலைவர் மகேஷ் திம்மரோடி உள்ளிட்ட ஆறு பேர் மீது 3,923 பக்க குற்றப்பத்திரிகை தாக்கலானது.
கைதாகி ஜாமினில் வந்த சின்னையா, கிரிஷ் மட்டன்னவரிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், எஸ்.ஐ.டி., விசாரணை வேகமாக நடக்கவில்லை என்றும், புகார் கூறினார்.
இதனால் எஸ்.ஐ.டி., அதிகாரிகளை, நீதிமன்றம் கண்டித்தது. விசாரணை வேகமெடுத்தது.
பெல்தங்கடி நீதிமன்றத்தில் நீதிபதி ஷஷாங்க் முன், 7,000 பக்க, இறுதி விசாரணை அறிக்கையை, எஸ்.ஐ.டி., - எஸ்.பி., சைமன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையில், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்த, 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அவதுாறு பரப்ப திட்டமிட்டது; 255 சாட்சியங்கள்; ஹார்ட் டிஸ்க், பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் கிடைத்தது என்ன; யார் சதி செய்தனர்; எப்.எஸ்.எல்., அறிக்கையில் உள்ளது என்ன என்பது பற்றி பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சில இடங்களில் ஆய்வு செய்த போது கிடைத்த எலும்பு கூடுகள், புகார் அளிக்க வந்த போது சின்னையா கொண்டு வந்த மண்டை ஓடும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
