ADDED : ஏப் 13, 2026 01:22 AM

தார்வாட்: காங்கிரஸ் தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலராக இருந்தவர் பைரோஜ் படான், 28. இவர் தார்வாட் ஹாஷ்மி நகரில் வசித்து வந்தார். இவருக்கு வரும் 24ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இவர் கடந்த 10ம் தேதி தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இச்சம்பவம் தார்வாடில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்தவர்களை பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலம் வாங்கினர். பல கோணங்களில் போலீசார் விசாரித்தனர்.
இவ்வழக்கில் படானின் நண்பர்கள் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. படானின் நண்பர்கள் முகமது ஷா, சதாம், கவுல், பர்வேஸ் சமீர், முக்தும், அர்பாஸ் உட்பட8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.முதல் குற்றவாளியாக முகமது ஷா உள்ளார்.
படான் - முகமது ஷா இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமே கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இது குறித்து, போலீசார்கூறியதாவது:
பைரோஜ் படான் - முகமது ஷா, 31, இருவரும் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்கு இடையில் சில நாட்களுக்கு முன் தனிப்பட்ட தகராறு நடந்தது. இதனால் படான், முகமது ஷாவின் வீட்டிற்கு சென்று பிரச்னை செய்தார். இதை சக நண்பர்களிடம் கூறி 'கெத்து' காண்பித்து வந்து உள்ளார். இதனால், படானை பழிவாங்க முகமது ஷா முடிவு செய்தார்.
இதனிடையே, படானுக்கும், ரவுடி முக்தும் சோகாலாத்துடன் ரியல் எஸ்டேட் விவகாரத்தில் பிரச்னை நடந்தது. இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி படானை கொலை செய்த திட்டமிட்டனர். அதன்படி, கொலை செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கயீப் தேடப்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
