சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
ADDED : ஆக 18, 2026 02:47 AM

பெங்களூரு: கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 800 கிலோவுக்கும் அதிகமான ஜெலட்டின் குச்சிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரின் பெல்லந்துார் அருகில் உள்ள போகனஹள்ளியில் அவ்வப்போது இரவு நேரத்தில், வெடிச்சத்தம் கேட்கிறது. அங்கு நடக்கும் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள பாறைகளை தகர்க்க, சட்டவிரோதமாக ஜெலட்டின் வெடி பொருள் பயன்படுத்துவதாக, புகார் கூறப்பட்டது.
இதே பகுதியில் ஆதர்ஷா கட்டுமான நிறுவனம், கட்டடம் கட்டி வருகிறது. பணிகளுக்கு வெடி பொருள் பயன்படுத்துவதாக, அப்பகுதியினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து பெல்லந்துார் போலீசார், நேற்று முன்தினம் போகனஹள்ளிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
பணிகள் நடக்கும் இடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோவுக்கும் அதிகமான ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக வெடி பொருள் சேகரித்து வைத்திருந்த புகாரில் அருண்குமார், ஜெகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பணிகள் நடந்து வரும் இடத்தில், பெரிய பெரிய கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றை அகற்ற பாதுகாப்பான முறையை பின்பற்றாமல், அபாயமான ஜெலட்டின் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
கட்டட பணிகள் நடக்கும் பகுதியின் அருகிலேயே பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. இத்தகைய இடத்தில் நள்ளிரவு 12:00 மணிக்கு பின், ஜெலட்டின் பயன்படுத்தி பாறைகளை வெடிக்க வைப்பதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர்.
'ஜெலட்டின் மிகவும் அபாயகரமான வெடி பொருளாகும். இதனை முன்னெச்சரிக்கை இல்லாமல் பயன்படுத்துகின்றனர். இது வெடித்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். சிறார்களுக்கு அபாயம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இவர்கள் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை துவக்கியுள்ளனர்.
'இந்த அளவுக்கு ஜெலட்டின் சேகரித்து வைத்தது ஏன்; பணிகளுக்கு வெடி பொருள் பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா; இரவு நேரத்தில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டனவா; ஜெலட்டின் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?' என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
