ADDED : ஆக 18, 2026 02:48 AM
மைசூரு: கன்னட ஆஷாடா மாதத்தின் நான்கு வெள்ளிக்கிழமை, சாமுண்டீஸ்வரி ஜெயந்தி, வார இறுதி நாட்களில் 8.61 லட்சம் பக்தர்கள், அம்மனை தரிசித்ததுடன், 2,000 ரூபாய் டிக்கெட் மூலம் 3.08 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
இது தொடர்பாக சாமுண்டீஸ்வரி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கன்னட ஆஷாடா எனும் ஆடி மாதத்தை ஒட்டி, மைசூரு சாமுண்டி மலைக்கு வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நடப்பாண்டு ஆஷாடாவின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, சாமுண்டீஸ்வரி ஜெயந்தி, சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ஜூலை 17ல் 55,000 பேரும்; ஜூலை 24ல் 75,000 பேரும்; ஜூலை 31ல் 98,500 பேரும், ஆக., 7ல் 1.25 லட்சம் பேர் என மொத்தம் 3,53,500 பேரும்; சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் 4,18,500 பேரும்; ஆக., 4ல் சாமுண்டீஸ்வரி ஜெயந்தியன்று 89,000 பேரும் என மொத்தம் 8.61 லட்சம் பக்தர்கள், அம்மனை தரிசித்துள்ளனர்.
தர்ம தரிசனம் மூலம், 8,45,579 பக்தர்கள் அம்மனை தரிசித்துள்ளனர். 15,421 பேர், 2,000 ரூபாய் நுழைவு கட்டணம் பெற்றுள்ளனர். இதன் மூலம், 3,08,42,000 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மேம்பாட்டு ஆணைய செயலர் டாக்டர் ரூபா கூறுகையில், ''சாமுண்டி மலைக்கு ஆஷாடா வெள்ளிக்கிழமை உட்பட 13 நாட்களில், 8.61 லட்சம் பக்தர்கள் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்துள்ளனர். 2,000 ரூபாய் நுழைவு கட்டணம் மூலம், 3,08,42,000 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு கோட்ட கட்டுப்பாட்டாளர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ''மைசூரு சாமுண்டி மலைக்கு, 4,935 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டளன. இதில் அதிகபட்சமாக ஜூலை 17ல், 470 பஸ் பயணங்களும்; ஆக., 7ல் 466 பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்தாண்டு ஆஷாடா மாதத்தில் மட்டும், 82,01,834 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,'' என்றார்.
