பி.ஜி.,யில் சிலிண்டர் வெடித்ததில் மேற்கு வங்கத்தின் 9 பேர் படுகாயம்
பி.ஜி.,யில் சிலிண்டர் வெடித்ததில் மேற்கு வங்கத்தின் 9 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 23, 2026 11:11 PM

சர்ஜாபூர்: பெங்களூரில், பி.ஜி., எனும், தங்கும் விடுதியில் சிலிண்டர் வெடித்து சிதறியதில், மேற்கு வங்க மாநிலத்தின், ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு பொம்மசந்திராவில், 'ஸ்ரீசாய் கம்போர்ட்' என்ற பெயரில் பி.ஜி., எனும் தங்கும் விடுதி செயல்படுகிறது. ஏழு மாடி கொண்ட அந்த கட்டடத்தில் 43 அறைகள் உள்ளன. நாகராஜ் ரெட்டி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தை கங்கராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார்.
இந்த பி.ஜி.,யில் தங்கியுள்ளவர்களில் பெரும்பாலோனார் மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் இங்கு கட்டட வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் மேற்கு வங்கத்தின் 10 பேர் தங்கி இருந்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு சவுரவ் சவுத்ரி என்பவர், மின்விளக்கை எரியவிட சுவிட்சை ஆன் செய்தார்.
அப்போது சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. பக்கத்து அறைகளில் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடினர்.
தகவல் அறிந்த ஹெப்பகோடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அந்த அறைக்குள் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சந்தாபுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், ஆறு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்து நடந்த அறையில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால், ஜன்னல் வழியாக அறைக்குள் கொசு வர கூடாது என்பதற்காக ஜன்னலை மூடி வைத்து துாங்கி உள்ளனர்.
மேலும், நேற்று முன்தினம் இரவு காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, அறை முழுதும் காஸ் கசிந்துள்ளது. இது தெரியாமல் நேற்று காலை சவுரவ் சவுத்ரி, 'சுவிட்ச் ஆன்' செய்ததால் தீ விபத்து நடந்தது தெரிந்துள்ளது.
இதையடுத்து, கட்டட உரிமையாளர் நாகராஜ் ரெட்டி, பி.ஜி., நடத்திய கங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
