20 ஆண்டுக்கு முன் மாயமானவர் சாமியாராக வீடு திரும்பினார்
20 ஆண்டுக்கு முன் மாயமானவர் சாமியாராக வீடு திரும்பினார்
ADDED : மே 29, 2026 12:42 AM

பல்லாரி: வீட்டை விட்டு காணாமல் போன மகன், 20 ஆண்டுகளுக்கு பின் திரும்பினார். காவி உடை அணிந்து தாடி, மீசையுடன் சாமியாராக வந்துள்ளார்.
பல்லாரி மாவட்டத்தின் குருகோடுவை சேர்ந்தவர் சந்திரசேகர ஆச்சாரி. இவரது மனைவி சந்திரகலா. தம்பதியின் ஒரே மகன் சங்கர் ஆச்சாரி. இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
17 வயது சிறுவனாக இருந்த போது, குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டதால், வேலை தேடி சங்கர் ஆச்சாரி, பெங்களூரு சென்றார்; பேக்கரி ஒன்றில் பணிக்கு சேர்ந்தார்.
மனவருத்தம் அதன்பின் சொந்த ஊருக்கு திரும்பிய இவர், சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். அதன்பின் பெங்களூருக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவே இல்லை. பெற்றோர் பெங்களூரு சென்று, மகனை தேடினர். பல ஆண்டுகளாக தேடியும் கிடைக்காததால், மனம் வருத்தத்துடன் காலம் கடத்தினர்.
மகன் காணாமல் போய், 20 ஆண்டுகள் ஆன நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் அருகில் உள்ள குன்டேஸ்வரா மடத்தில் சுவாமிஜியாக மாறியது தெரிந்தது.
குரகோடுவில் வசிக்கும் நபர் ஒருவர், குஜராத் சென்ற போது, எதிர்பாராமல் காளிகா தேவி மடத்துக்கு சென்றார். அங்கு சங்கர் ஆச்சாரி, மடாதிபதியாக இருப்பதை கண்டார். அவருடன் பேசும் போது, அவரே, தன் ஊரில் காணாமல் போன சங்கர் ஆச்சாரி என்பது உறுதியானது. உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் கூறினார்.
தங்களின் மகன் அனைவரும் வணங்கும் மடாதிபதியாக இருப்பதை அறிந்து, பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு முறை ஊருக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். சங்கர் ஆச்சாரியும் மே 26ம் தேதியன்று, குரகோடு வந்தார். 18 வயதில் காணாமல் போய், 20 ஆண்டுக்கு பின், சொந்த ஊருக்கு வந்த அவருக்கு, ஊரார் அமோக வரவேற்பு அளித்தனர்.
துணை மடாதிபதி சங்கர் ஆச்சாரிக்கு கன்னடம் தெளிவாக பேச வரவில்லை. ஹிந்தி, ஆங்கிலத்தில் உரையாடுகிறார். பெங்களூரில் இருந்து மும்பைக்கு சென்றார். அதன்பின் உத்தரகண்டின், ஹரித்வாரில் ஏழு ஆண்டு தங்கினார்.
அங்கு நிரஞ்சன் தேவ் என்ற குருவிடம் தீட்சை பெற்று, சன்னியாசியாக மாறினார். எட்டு ஆண்டுகளாக, குன்டேஸ்வரா கோவில் மடத்தின் துணை மடாதிபதியாக இருந்து வருவது தெரிந்தது.
சொந்த ஊரில் தன் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களை சந்தித்து பேசி மகிழ்கிறார். இன்னும் சில நாட்களில், அவர் மீண்டும் ஆமதாபாத் செல்ல உள்ளார்.
