ADDED : ஜூன் 02, 2026 01:10 AM

- நமது நிருபர் -:
கதக் மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவில் லக்குன்டி கிராமம் உள்ளது. தற்போது, சிறிய கிராமமாக பார்க்கப்படும் லக்குன்டி, ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நகராக விளங்கியது. இதற்கு, இங்குள்ள ஆலயங்களே சான்று. இந்த கோவில்களில் பெரும்பாலானவை முற்றிலும் சிதிலமடைந்து விட்டன.
சில கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. இங்குள்ள கோவில்கள் சாளுக்கியர்களின் கட்டடக்கலையை பிரதிபலிக்கின்றன. ஹொய்சாளர் பேரரசர் இரண்டாம் வீர பல்லாலன் காலத்தில் முக்கியமான படைவீடாகவும் விளங்கியது.
இப்படிப்பட்ட லக்குன்டியில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோவில் என்றால், அது காசி விஸ்வேஸ்வரா கோவில். இங்கு, இரு கருவறைகள் உள்ளன. கிழக்கு நோக்கி காசி விஸ்வேஸ்வரரும், மேற்கு நோக்கி சூரிய பகவானும் தனித்தனி கருவறைகளில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
சூரிய பகவான் மேற்கு திசை நோக்கி இருப்பது அரிதான விஷயமாகும். இரு கருவறைகள் கொண்ட அரிதான கோவிலாகும்.
கருவறை நுழைவுவாயிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும் வடிவில் உள்ளன. இதில், அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இவற்றை ரசித்து கொண்டே இருக்கலாம்.
தொழில் வளர்ச்சி, தீராத நோயில் இருந்து விடுபட, நீண்ட ஆயுள் வேண்டி பக்தர்கள் மனமுருகி பிரார்த்திக்கின்றனர். இது சிவபெருமானுக்கும், சூரிய தேவனுக்கும் சேர்த்துக் கட்டப்பட்ட இரட்டை கோவில். இக்கோவிலை சுற்றி மிகப்பெரிய அளவிலான மதில் சுவர்கள் உள்ளன. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
மஹா சிவராத்திரி போன்ற முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் கோவிலுக்கு வரும்.
